கனேடிய குடிமகன் : ராணா விவகாரத்தில் இருந்து விலகிய பாகிஸ்தான்!
கடந்த 2008ஆம் ஆண்டு நடந்த மும்பை பயங்கரவாதத் தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்ட தஹாவூர் ஹுசைன் ராணாவை பல ஆண்டுகளுக்கு பின் அமெரிக்கா இந்தியாவிடம் ஒப்படைத்துள்ளது. இந்நிலையில் பாகிஸ்தான் வம்சாவளியான ராணா குறித்து பாகிஸ்தான் கருத்து தெரிவித்துள்ளது.
“கடந்த 20 ஆண்டுகளாக தஹாவூர் ராணா தனது பாகிஸ்தான் ஆவணங்களை புதுப்பிக்கவில்லை. அவரது கனேடிய குடியுரிமை மிகவும் தெளிவாக உள்ளது. கனடாவுக்கு குடிபெயர்ந்தவர்களுக்கு பாகிஸ்தான் இரட்டை குடியுரிமை வழங்காது” என்று பாகிஸ்தான் வெளியுறவு அலுவலகம் ஒரு அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் 26-ந்தேதி தாஜ் ஹோட்டல், ரயில் நிலையம் உள்ளிட்ட பகுதியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 166 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர். இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர்களில் பாகிஸ்தான் வம்சாவளியை சேர்ந்த அமெரிக்கரான டேவிட் கோல்மேன் ஹட்லியும் ஒருவர்.
லஷ்கர் இ தொய்பா என்ற பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய இவரும், பாகிஸ்தான் வம்சாவளியை சேர்ந்த கனடா நாட்டு தொழில் அதிபரான தஹாவூர் ராணாவும் மும்பை தாக்குதலில் கூட்டு சதியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.
இந்த வழக்கில் தஹாவூர் ராணாவை இந்தியா தேடிவந்த நிலையில் அவர் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டார். 2014-ம் ஆண்டு அவருக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் லாஸ் ஏஞ்சல்சில் உள்ள தடுப்பு மையத்தில் அடைக்கப்பட்டார். தஹாவூர் ராணாவை தங்களிடம் ஒப்படைக்குமாறு இந்தியா பல ஆண்டுகளாக கோரி வந்தது.
இந்நிலையில் அமெரிக்க அதிபராக பதவியேற்ற ட்ரம்ப் ராணா நாடு கடத்தப்படுவார் என அறிவித்தார். தன்னை நாடு கடத்தக்கூடாது என தஹாவூர் ராணா அமெரிக்க நீதிமன்றங்களில் தாக்கல் செய்த மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டது. இறுதியாக அமெரிக்க உச்ச நீதிமன்றமும் அவரது மனுவை நிராகரித்த நிலையில் அவர் இந்தியா கொண்டு வரப்பட உள்ளார். டெல்லி வந்ததும் அவரை என்ஐஏ கைது செய்து திகார் சிறையில் அடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.