ராமேஸ்வரம் மீனவர்களின் வேலை நிறுத்த போராட்டம் தொடங்கியது!
ராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று முன் தினம் மீன் பிடிக்க சென்ற 1 விசைப்படகையும் 7 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் கைது செய்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்தது. கைது செய்யபட்ட மீனவர்களை இலைங்கை கடற்படையினர் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மீனவர்களை வரும் 21ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து அனைவரும் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர். மீன்பிடி தடைக்காலம் முடிந்து மீன் பிடிக்க சென்ற 55 நாட்களில் 61 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் நேற்று ராமேஸ்வரம் மீன் பிடித்து துறைமுகத்தில் மீனவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் இலங்கை கடற்படையால் மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதை கண்டித்தும், உடனடியாக மீனவர்களை படகுடன் விடுதலை செய்ய வலியுறுத்தியும் பல்வேறுகட்ட போராட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ராமேஸ்வரம் மீனவர்கள் வரும் 13ஆம் தேதி தங்கச்சிமடத்தில் மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளனர். தொடர்ந்து வரும் 15ந் தேதி சுதந்திர தினத்தன்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்த உள்ளனர்.
மேலும், 19ஆம் தேதி முதல் தொடர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். மேலும் இலங்கைச் சிறையில் உள்ள மீனவர்களை விடுதலை செய்யும் வரை ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் முடிவு செய்திருந்தனர்.
இந்த நிலையில் இலங்கை கடற்படை சிறைபிடித்த ராமேசுவரம் மீனவர்ளை விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக 700-க்கும் மேற்பட்ட விசைப் படகுகள் மீன் பிடிக்கச் செல்லாமல், கரையோரம் நங்கூரமிட்டு நிறுத்தியுள்ளனர். வேலை நிறுத்தம் காரணமாக நேரடியாகவும், மறைமுகமாகவும் 10,000-க்கும் மேற்பட்ட மீனவர்களுக்கு வேலை இழப்பும், நாள் ஒன்றுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பும் ஏற்பட்டுள்ளது.