’ராமேஸ்வரம் மீனவர்கள் 4-வது நாளாக வேலைநிறுத்தம்’
ராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகத்தில் இருந்து மீன் பிடிக்க சென்ற 1 விசைப்படகையும் 7 மீனவர்களையும் கடந்த 9 ஆம் தேதி இலங்கை கடற்படையினர் கைது செய்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர். கைது செய்யபட்ட மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மீனவர்களை வரும் 21ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து அனைவரும் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர். மீன்பிடி தடைக்காலம் முடிந்து மீன் பிடிக்க சென்ற 55 நாட்களில் 61 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் நேற்று ராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகத்தில் மீனவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் இலங்கை கடற்படையால் மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதை கண்டித்தும், உடனடியாக மீனவர்களை படகுடன் விடுதலை செய்ய வலியுறுத்தியும் பல்வேறுகட்ட போராட்டங்கள் அறிவிக்கப்பட்டது.
அதன்படி, ராமேஸ்வரம் மீனவர்கள் 4வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் திட்டமிட்டபடி 15ந் தேதி சுதந்திர தினத்தன்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்த உள்ளதாகவும் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.