பாமக உட்கட்சி விவகாரம் - ராமதாஸ் தரப்பு தேர்தல் ஆணையத்தில் மனு..!
பாமக உட்கட்சி விவகாரம் தொடர்பாக பாமக கவுரவ தலைவர் ஜி.கே.மணி மற்றும் வழக்கறிஞர் அருள் ஆகியோர் இந்திய தேர்தல் ஆணையத்தில் மனு கொடுத்தனர். இதன்பின் ஜி.கே.மணி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
”தேர்தல் ஆணைய அதிகாரிகளை சந்தித்து பாமக தொடர்பான சில ஆவணங்களையும், தகவல்களையும் வழங்கியுள்ளோம்.
பாமக நிறுவனராக இருந்தவர் தற்போது தலைவராகவும் ராமதாஸ் பொறுப்பேற்று உள்ளார். முன்னதாக அன்புமணி தலைவராக 3 ஆண்டு பதவி வகித்தார், அவரின் பதவி காலம் முடிந்ததும், நிர்வாக குழுகூடி மருத்துவர் ராமதாசை தலைவராக தேர்ந்தெடுத்தது, பின்னர் பொதுக் குழுவிலும் மருத்துவர் ராமதாசை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் சில தவறான தகவல்களை கொடுத்து 2026 ஆம் ஆண்டு வரை தன்னுடைய பதவி காலம் இருக்கிறது என்றும் மேலும் சில பொய்யான ஆவணங்களையும் திருத்தத்தையும் மேற்கொண்டு கட்சியினுடைய முகவரியை மாற்றி உள்ளார்.
முன்னதாக 2022 பொதுக்குழுவில் எட்டு தீர்மானமே நிறைவேற்றப்பட்ட நிலையில் ஒன்பதாவது ஆக ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும் அது முகவரி மாற்றம் தொடர்பான தீர்மானம் என்றும் கூறி தவறான தகவல்களை தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்துள்ளார். பாமக கட்சியின் தலைமை அலுவலக முகவரியை மாற்றி அன்புமணி முறைகேடை செய்துள்ளார்.
அன்புமணி கட்சியின் அலுவலக முகவரி மாற்றியது மற்றும் ஓராண்டு தலைவர் பதவி நீட்டிப்பு என்று அனைத்தும் பொய்யான தகவல் அது மிகப் பெரிய முறைகேடு. பாமக தலைவர் பதவி நீட்டிப்புக்காக தவறான ஆவணங்களை, தகவல்களை அன்புமணி கொடுத்துள்ளார் என்பதற்கான ஆதாரங்களை கொடுத்தோம். அதனை பார்த்து விட்டு, பதவி நீட்டிப்புக்காக அன்புமணி கொடுத்த ஆவணம் தவறானது என்பதை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டுள்ளது
பாமக விவகாரத்தில் விரைவில் தேர்தல் நல்ல முடிவை அறிவிக்கும். வரும் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் கூட்டணி பேச்சு வார்த்தைக்கு பாமக தலைவர் மருத்துவர் ராமதாசுக்கு மட்டுமே முழு அதிகாரம் உள்ளது"
என்று தெரிவித்துள்ளார்.