"ராமர் கோயில் பிரதிஷ்டை : சோனியா , கார்கே பங்கேற்பது குறித்து விரைவில் முடிவு " - ஜெய்ராம் ரமேஷ் அறிவிப்பு
"ராமர் கோயில் பிரதிஷ்டை விழாவில் சோனியா காந்தி , மல்லிகார்ஜுனா கார்கே பங்கேற்பது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்பட்டு அறிவிக்கப்படும் என ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் கடந்த 2019-ஆம் ஆண்டு அளித்த தீர்ப்பைத் தொடர்ந்து கடந்த 2020 ஆகஸ்ட் முதல் பூமி பூஜை செய்யப்பட்டு அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. 2.27 ஏக்கர் பரப்பளவில் 3 அடுக்கில் உருவாகி வரும் ராமர் கோயிலின் கட்டுமானப் பணிகள் முடிவடையவுள்ள நிலையில், கோயில் கருவறையில் மூலவர் குழந்தை ராமர் சிலை வரும் ஜனவரி 22-ஆம் தேதி பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் குறிப்பாக பாஜக தலைவர்கள் இதில் கலந்துகொள்வார்கள் என்று தெரிகிறது. இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் காங்கிரஸ் நாடாளுமன்ற குழுத் தலைவர் சோனியா காந்தி ஆகியோரை நேரில் சந்தித்து கோயில் அறங்காவலர்கள் குழு தலைவர்கள் அழைப்பிதழ் வழங்கியுள்ளனர். இதனைத்தொடர்ந்து முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக் குறைவால் ஓய்வெடுத்து வருவதால், அவரது வீட்டுக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது.
அதுபோல, முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், முன்னாள் பிரதமர் தேவ கௌடா, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜரிவால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் டி.ராஜா ஆகியோருக்கும் அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், இந் நிகழ்வில் சோனியா காந்தி அல்லது காங்கிரஸ் தரப்பில் பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளார் சீதாராம் யெச்சூரி சிபிஎம் ராமர் கோயில் விழாவில் பங்கேற்காது என அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார். இந்த நிலையில் காங்கிரஸ் பொதுச் செயலாளார் ஜெய்ராம் ரமேஷ் 'காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, கார்கேவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் அவர்கள் பங்கேற்பது குறித்து உரிய நேரத்தில் முடிவெடுக்கப்படும். இதன் பிறகு அதிகாரப்பூர்வமாக தகவல் அறிவிக்கப்படும்' என தெரிவித்துள்ளார்.