ராமர் சிலை பிரதிஷ்டை - இளநீர், வெறும் தரையில் உறக்கம் என விரதம் இருக்கும் பிரதமர் மோடி!
ராமர் சிலை பிரதிஷ்டையை முன்னிட்டு இளநீர் மட்டுமே குடித்து, வெறும் தரையில் உறங்கி பிரதமர் மோடி தீவிர விரதம் இருந்து வருகிறார்.
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் கடந்த 2019-ஆம் ஆண்டு அளித்த தீர்ப்பைத் தொடர்ந்து கடந்த 2020 ஆகஸ்ட் முதல் பூமி பூஜை செய்யப்பட்டு அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. 2.27 ஏக்கர் பரப்பளவில் 3 அடுக்கில் உருவாகி வரும் ராமர் கோயிலின் கட்டுமானப் பணிகள் முடிவடையவுள்ள நிலையில், கோயில் கருவறையில் மூலவர் குழந்தை ராமர் சிலை வரும் ஜனவரி 22-ஆம் தேதி பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. இந்த விழாவில் கலந்து கொள்ள நாடு முழுவதும் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து வருகிற 22-ஆம் தேதி மதியம் 12.20 மணியளவில் தொடங்கும் பிரதிஷ்டை நிகழ்வு, 1 மணி வரை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் மோடி, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத், உத்தர பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல், உபி மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், ராமர் கோயில் அறக்கட்டளையின் தலைவர் மஹந்த் நிருத்ய கோபால்தாஸ் உள்ளிட்டோர் முன்னிலையில் இந்நிகழ்வு நடைபெறவுள்ளது.
அயோத்தியில் உள்ள ராமர் கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ள ராமர் சிலை கருவறைக்குள் நேற்று காலை கொண்டு செல்லப்பட்டது. கிரேன் இயந்திரம் மூலம் ராமர் சிலை கருவறைக்குள் வைக்கப்படுவதற்கு முன்னதாக சிறப்புப் பூஜைகள் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து வருகிற 22ம் தேதி ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளதால் அதுவரை பிரதமர் மோடி சில கண்டிப்பான சடங்குகளை பின்பற்றுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ’யாம்’ சடங்குகளை பின்பற்றி 11 நாட்கள் விரதம் இருக்கும் பிரதமர் மோடி வெங்காயம், பூண்டு உள்ளிட்ட பல உணவுகளை தவிர்த்து கட்டுப்பாடுகளுடன் இருக்கிறார். இதன் மூலம் உடல் மற்றும் மனதின் சாத்வீக நிலையை அடைய முடியும் என நம்பப்படுகிறது.
மேலும் இந்த விரதத்தை கடைபிடிக்கும் பிரதமர் மோடி ஒரே ஒரு போர்வையை விரித்து வெறும் தரையில் உறங்குவதாகவும் , வெறும் இளநீர் மட்டுமே உணவாக எடுத்துக் கொள்வதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.