இந்திய ராணுவத்திற்கு ஆதரவாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பேரணி!
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பின்னால் பாகிஸ்தான் இருப்பதாக சந்தேகித்த இந்தியா, பாகிஸ்தான் உடனான உறவை இந்தியா முற்றிலுமாக துண்டித்தது. குறிப்பாக, வான்பரப்பு மூடல், சிந்துநதி ஒப்பந்தம் ரத்து, பாகிஸ்தானியர்கள் வெளியேற்றம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டது.
இதற்கிடையே, கடந்த 7ம்தேதி நள்ளிரவு 1.44 மணியளவில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. மொத்தம் 9 இடங்களில் (சகாம்ரு, முரித்கி, கோட்லி, சியால்கோட், குல்பூர், பிம்பர், பஹவல்பூர்) பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து, இந்தியா – பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வருகின்றன. இதனால் எல்லையில் போர் பதற்றம் நிலவி வருகிறது.
இந்த சூழலில், பாகிஸ்தான் தாக்குதலுக்கு எதிராக இந்திய ராணுவம் நடத்தி வரும் தாக்குதலுக்கு ஆதரவை வெளிப்படுத்தும் விதமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று பேரணி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில், சென்னையில் உள்ள காவல்துறை தலைமை அலுவலகத்தில் இருந்து தலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பேரணி தொடங்கியுள்ளது. இந்த பேரணி போர் நினைவுச் சின்னம் அருகே நிறைவு பெறுகிறது. இதில், முன்னாள் படை வீரர்கள், அமைச்சர்கள், பொதுமக்கள், மாணவர்கள் பங்கேற்றுள்ளனர்.