மாநிலங்களவை தேர்தல் | திமுக, அதிமுக வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் ஏற்பு!
தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட வைகோ, பி.வில்சன், சண்முகம், முகமது அப்துல்லா, அன்புமணி மற்றும் சந்திரசேகரன் ஆகிய 6 பேரின் பதவிக்காலம் வரும் ஜூலை 27-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து, காலியாக உள்ள 6 இடங்களுக்கான தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்தது. தமிழ்நாடு சட்டப்பேரவையில், எம்எல்ஏக்கள் பலம் அடிப்படையில் 6 இடங்களில் 4 திமுகவுக்கும், இரண்டு அதிமுகவுக்கும் கிடைக்கும். அதன் அடிப்படையில், திமுக சார்பில் 4 இடங்களுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசன், பி.வில்சன், கவிஞர் சல்மா, சிவலிங்கம் ஆகியோர் அறிவிக்கப்பட்டனர்.
அதிமுக சார்பில், தனபால் மற்றும் ஐ.எஸ்.இன்பதுரை ஆகியோர் அறிவிக்கப்பட்டனர். கடந்த ஜூன் 2-ம் தேதி இந்த தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் தொடங்கியது. தொடர்ந்து, கடந்த ஜுன் 6ம் தேதி திமுக, அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்யதனர். அதன்படி, மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் வில்சன், சல்மா மற்றும் சிவலிங்கம் மற்றும் மநீம தலைவர் கமல்ஹாசன் ஆகியோர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
அதேபோல், அதிமுக வேட்பாளர்களான தனபால் மற்றும் ஐ.எஸ்.இன்பதுரை ஆகியோர் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் வேட்புமனு தாக்கல் செய்தனர். இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்தது. இந்த நிலையில், வேட்புமனு பரிசீலனை இன்று நடைபெற்றது. இந்த தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தாக்கல் செய்த வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்டது.
அதேபோல், திமுக மற்றும் அதிமுக வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டு சுயேட்சை வேட்பாளர்கள் 7 பேரின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. திமுக வேட்பாளர்கள் வில்சன், சல்மா, சிவலிங்கம், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் மற்றும் அதிமுக வேட்பாளர்கள் இன்பதுரை, தனபால் ஆகியோர் மாநிலங்களவைக்கு போட்டியின்றி தேர்வாகின்றனர். வேட்பு மனுக்களை திரும்பப்பெற நாளை மறுநாள் (ஜுன்.12) கடைசி நாளாகும். அன்று மாலை 3 மணிக்கு பிறகு மாநிலங்களவை தேர்வாகியுள்ளவர்களு வெற்றிபெற்றதற்கான சான்றிதழ் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.