தமிழ்நாட்டில் அடுத்த 6 நாட்களுக்கு மழை தொடரும் -வானிலை ஆய்வு மையம் தகவல்!...
தமிழ்நாட்டில் அடுத்த 6 நாட்களுக்கு மழை தொடரும் என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, நாளை செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் எனவும் சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம், நெல்லை தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய 9 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.
அதேபோல புதுச்சேரி மற்றும் காரைக்காலின் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும் எனவும் தெரிவித்துள்ளது. நாளை மறுநாள் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும்
வரும் 10-ம் தேதி கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளது. தென்தமிழக கடலோரப்பகுதிகள், தென்மேற்கு வங்கக்கடல், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் மற்றும் மாலத்தீவு கடற்பகுதிகளில் சூறாவளிக் காற்று வீச வாய்ப்புள்ளதால் வரும் 11-ம் தேதி வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது..