Rain Alert | இரவு 7 மணி வரை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?
ஒடிசா கடலோரப்பகுதிகளை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நேற்று காலை நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, வடக்கு திசையில் மெதுவாக நகர்ந்து, இன்று (29-05-2025) காலை 05.30 மணி அளவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெற்றது. இது மேற்கு வங்கத்திற்கும், வங்க தேசத்துக்கும் இடையே இன்று கரையைக் கடந்தது. இதன் காரணமாக இன்று முதல் வரும் 4ம் தேதி வரை தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக, நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஒருசில இடங்களில் கன முதல் அதி கனமழையும், திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள், தேனி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் 16 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, திண்டுக்கல், நாமக்கல், சேலம், திருச்சிராப்பள்ளி, விருதுநகர், கடலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் அரியலூர் ஆகிய மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.