3வது டி20 போட்டி | தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி!
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் கட்டாக்கில் நடந்த முதலாவது போட்டியில் இந்தியா 101 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நியூசண்டிகாரில் நடந்த 2-வது போட்டியில் தென் ஆப்பிரிக்கா 51 ரன் வித்தியாசத்தில் வென்றது. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருந்தது. இந்த நிலையில், இவ்விரு அணிகளுக்கும் இடையிலான 3-வது போட்டி மலைவாசஸ்தலமான தர்மசாலாவில் உள்ள ஹிமாசலபிரதேச மாநில கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவர்களில் 117 ரன்கள் அடித்த நிலையில் ஆல் அவுட் ஆனது. தென் ஆப்பிரிக்க அணியின் சார்பில் அதிகபட்சமாக கேப்டன் மார்கரம் 61 ரன்கள் அடித்தார். இந்தியா தரப்பில் அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா, வருண் சக்ரவர்த்தி, குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், ஹர்திக் பாண்டியா மற்றும் ஷிவம் துபே தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதனையடுத்து 118 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணியின் சுப்மன் கில் - அபிஷேக் சர்மா களமிறங்கினர். இதில், அபிஷேக் சர்மா 35 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து திலக் வர்மா - சுப்மன் கில் ஜோடி சேர்ந்து அதிரடி காட்டினர். இதற்கிடையே, கில் 28 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியில் 15.5 ஓவர்களில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 120 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.