Rain Alert | இந்த மாவட்டங்களுக்கு அடுத்த 2 நாட்களுக்கு 'ரெட் அலர்ட்' - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
தெற்கு கொங்கன் கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் உருவாகிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவியது. இது வடக்கு திசையில் நகர்ந்து, அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக, வலுவடையக்கூடும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, வடக்கு திசையில் நகர்ந்து சென்ற ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது.
இது தொடர்ந்து, கிழக்கு திசை நோக்கி நகர்வதாகவும், இன்றே கரையை கடக்க வாய்ப்பு உள்ளதாகவும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் ரத்தினகிரிக்கும், டபோலிக்கும் இடையே காற்றழுத்த தாழ்வு மண்டலம் என்ற அளவிலேயே கரையை கடக்க வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் வரும் 28-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் உள்ள சில பகுதிகளுக்கு இன்று முதல் அடுத்த 2 நாட்களுக்கு கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இன்று (மே 24) : நீலகிரி, கோவை மாவட்ட மலைப்பகுதிகள், தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகளில் மிக கன மழைக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், திருப்பூர், திண்டுக்கல், தேனி, கன்னியாகுமரி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று (மே 24) கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை (மே 25) மற்றும் நாளை மறுநாள் (மே 26) : நீலகிரி, கோவை மாவட்ட மலைப்பகுதிகளுக்கு அதி கனமழைக்கான சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாளை (மே 25) மற்றும் நாளை மறுநாள் (மே 26) : தேனி, தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகளுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் திருப்பூர், திண்டுக்கல், உள்ளிட்ட இரண்டு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.