Rain Alert | 2 மாவட்டங்களுக்கு இன்றும், நாளையும் ஆரஞ்சு அலர்ட்!
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அந்த வகையில், தமிழ்நாட்டில் ஒரு சில பகுதிகளில் அவ்வப்போது மழை கொட்டி தீர்த்து வருகிறது. இருப்பினும் பகல் நேரங்களில் மக்கள் வெளியே வர முடியாத அளவிற்கு வெயில் வாட்டி வதைக்கிறது.
சென்னையை பற்றி சொல்ல தேவையே இல்லை. அந்த அளவிற்கு வெயிலின் தாக்கம் உள்ளது. இதற்கிடையே, நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இன்று மாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் 2 மாவட்டங்களுக்கு இன்றும், நாளையும் கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு 2 நாட்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும் தேனி, தென்காசி ஆகிய மாவட்டங்களுக்கு 2 நாட்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.