வயநாட்டில் ராகுல்காந்தி நாளை வேட்புமனு தாக்கல்!
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி வயநாடு தொகுதியில் நாளை வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
கேரளாவில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 26 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதனையடுத்து அரசியல் கட்சி வேட்பாளர்களும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கேரளாவில் வேட்பு மனு தாக்கல் கடந்த 28 ஆம் தேதி தொடங்கியது. வரும் 4-ஆம் தேதி மனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும்.
இந்த நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி வயநாடு தொகுதியில் நாளை வேட்புமனு தாக்கல் செய்கிறார். அவர் நாளை பகல் 12 மணியளவில் சாலையில் பேரணியாக சென்று வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளார். வேட்பு மனு தாக்கல் செய்யும் போது, அவரது சகோதரி பிரியங்கா காந்தியும் உடனிருப்பார் என தகவல் வெளியாகி உள்ளது.
வயநாடு தொகுதியில் ராகுல் காந்தியை எதிர்த்து பாஜக மாநில தலைவர் சுரேந்திரன், இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் ராஜாவின் மனைவியும், கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான ஆனி ராஜா உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர். கடந்த 2019 தேர்தலில், ராகுல் காந்தி வயநாடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.