ராகுல் காந்தி எப்பொழுதும் அம்பேத்கரை தூக்கிப் பிடிக்கிறார் - திருமாவளவன்!
தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த சொன்னம்பட்டி கிராமத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இணையும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கட்சியின் தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டு, மாற்று கட்சியிலிருந்து வந்தவர்களை விசிகாவில் இணைத்து கட்சியின் துண்டை அணிவித்து வரவேற்றார். இதனை தொடர்ந்து கூட்டத்தில் பேசிய விசிக தலைவர் திருமாவளவன்,
இந்தியாவில் அம்பேத்கரை வைத்து தான் அரசியல் நடைபெறுகிறது. அம்பேத்கருக்கு எதிராக பேசுபவர்கள், அம்பேத்கரை ஆதரித்து பேசுபவர்கள் என இரண்டு அணிகள் மட்டுமே செயல்படுகிறது. இதில் இந்திய அரசியலமைப்பு சட்ட புத்தகத்தினை ராகுல் காந்தி எங்கு சென்றாலும் உயர்த்தி பிடிக்கிறார். ஆனால் பாஜக அம்பேத்கருக்கு பிறந்தநாள் கொண்டாடுகிறார்கள். ஆனால் கோயிலுக்குள் நுழைய கூடாது என்றும், அந்த தெருவுக்கு தேர் வராது என்று சொல்கிறார்கள். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை ராகுல் காந்தி தூக்கி பிடிப்பது டாக்டர் அம்பேத்கரையை தூக்கிப் பிடிப்பது போன்றது.
இனி விடுதலை சிறுத்தைகளை தவிர்த்து விட்டு தமிழ்நாட்டில் ஒரு அரசியல் நகர்வு கிடையாது என்ற நிலை உருவாகியுள்ளது. இதற்காக நாம் பெரிய உழைப்பை கொடுத்து இருக்கின்றோம். மதம் மனிதனுக்கானது அரசுக்கானது இல்லை என்பதை எடுத்துக் காட்டுவதற்காக திருச்சியில் மதச்சார்பின்மை பேரணியை நடத்தி இருக்கிறோம். ராகுல் காந்தி எப்பொழுதும் அம்பேத்கரை தூக்கிப் பிடிக்கிறார்.
பாஜக இந்து மதம்தான் பெரியது என்கிறது. கிறிஸ்தவர்களையும், இஸ்லாமியர்களையும் இந்த நாட்டை விட்டு துரத்த வேண்டும், மாற்றத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்ற நோக்கில் இருந்து வருகிறது. கடந்த 2002 ஆம் ஆண்டு இதுபோன்ற ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது ஒரு சட்டத்தை கொண்டு வந்தார். அதை நான் கடுமையாக எதிர்த்தேன். அதனால் தான் எல்லோருக்கும் தூய தமிழ் பெயரை சூட்டினேன் என தெரிவித்துள்ளார்.