சீமான் குறித்த கேள்வி... ஒரே வார்த்தையில் பதிலளித்த உதயநிதி ஸ்டாலின்!
சென்னை கலைவாணர் அரங்கில் குடியரசு தினவிழா பேரணியில் பங்கேற்ற என்சிசி மாணவர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துக்கொண்டு என்சிசி மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கி கவுரவித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "தமிழ்நாட்டிலிருந்து 120க்கும் மேற்பட்ட என்சிசி மாணவர்கள் டெல்லியில் நடந்த குடியரசு தின விழாவில் கலந்து கொண்டு பல பரிசுகளை வென்றுள்ளனர். அவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. அவர்களை விமானத்தில் பயணிக்க வைப்பதற்காக 28 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து டெல்லி அனுப்பி வைத்தோம்.
அவர்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். சென்னை சைதாப்பேட்டையில் பெரியார் சிலை அவமதிக்கப்பட்ட சம்பவம் வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந்த விவகாரத்தில் அரசு நிச்சயம் நடவடிக்கை எடுக்கும்" என்று தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து பெரியார் மண் அல்ல, பெரியாரே ஒரு மண்ணுதான் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியுள்ளது குறித்து உதயநிதி ஸ்டாலினிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு உதயநிதி ஸ்டாலின் "நான் அவருக்கு பதில் சொல்வதே கிடையாது" என்று ஒரே வார்த்தையில் பதில் கூறினார்.