For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

புதுச்சேரி to வடபழனி : 2மணி நேரத்தில் கொண்டுவரப்பட்ட உடலுறுப்பு - வெற்றிகரமாக உறுப்புமாற்று சிகிச்சை செய்த காவேரி மருத்துவமனை.!

08:23 AM Jan 06, 2024 IST | Web Editor
புதுச்சேரி to வடபழனி   2மணி நேரத்தில் கொண்டுவரப்பட்ட உடலுறுப்பு    வெற்றிகரமாக உறுப்புமாற்று சிகிச்சை செய்த காவேரி மருத்துவமனை
Advertisement

புதுச்சேரியிலிருந்து  2மணி நேரத்தில் கொண்டுவரப்பட்ட உடலுறுப்பை வடபழனி காவேரி மருத்துவமனை வெற்றிகரமாக உறுப்புமாற்று  சிகிச்சை செய்து சாதித்துள்ளது.

Advertisement

மானுடத்தின் கனிவுக்கும், கருணைக்கும் தாராள மனதுக்கும் ஒருபோதும் அழிவில்லை. அத்தகையதொரு அறச்சிந்தனையின் அடிப்படையில் 43 வயதான ஒரு பெண்மணி, தனது உறுப்புதானத்தின் வழியாக முகம் தெரியாத வேறொரு நபருக்கு வாழ்க்கையின் புதிய அத்தியாயத்தை தொடங்க அரிதான ஒரு வாய்ப்பை அவர் வழங்கியிருக்கிறார்.

பெருமூளை தமனி குருதிநாள அழற்சியால் பாதிக்கப்பட்டு மூளைச்சாவடைந்த இப்பெண்மணியிடமிருந்து தானமாகப் பெறப்பட்ட நுரையீரல்கள் இதை சாத்தியமாக்கியிருக்கின்றன. ஒரு ஆண்டுக்கும் மேலாக உறுப்புமாற்று சிகிச்சைக்குப் பொருத்தமான நுரையீரல்களுக்காக 50 வயதான இந்நபர் காத்துக் கொண்டிருந்தார். தானமாக பெறப்பட்ட இரு நுரையீரல்களும் வடபழனி, காவேரி மருத்துவமனையில் இவருக்கு வெற்றிகரமாக உறுப்புமாற்று சிகிச்சையின் மூலம் பொருத்தப்பட்டன.

இருபக்க நுரையீரல்களும் மாற்றப்பட்டிருக்கும் இந்த வெற்றிகர உறுப்புமாற்று சிகிச்சை, நுரையீரல் உறுப்புமாற்று செயல்பாட்டில் வடபழனியில் அமைந்துள்ள காவேரி மருத்துவமனையின் நிபுணத்துவத்தை வலுவாக கோடிட்டுக் காட்டுகிறது. காவேரி மருத்துவமனைகள் குழுமத்தின் பிற மருத்துவமனைகளில் பல்வேறு உடலுறுப்புகளுக்கான உறுப்புமாற்று சிகிச்சைகள் வெற்றிகரமாக செய்யப்பட்டிருக்கும் சிறப்பான வரலாறு இருக்கின்ற நிலையில், வடபழனியில் அமைந்துள்ள காவேரி மருத்துவமனையில் இன்று நடந்திருக்கும் நிகழ்வு, இங்கு செய்யப்பட்டுள்ள முதல் நுரையீரல் உறுப்புமாற்று சிகிச்சை என்ற பெருமையை பெறுகிறது.

புதுச்சேரியில் அமைந்துள்ள ஜிப்மர் மருத்துவமனையிலிருந்து சென்னையின் வடபழனியில் அமைந்துள்ள காவேரி மருத்துவமனைக்கு மிக வேகமான சாலை வழி பயணத்தின் மூலம் கொண்டு வரப்பட்டிருக்கிறது. தாம்பரம் காவல்துறை ஆணையரகம், ஆவடி காவல்துறை ஆணையரகம், சென்னை போக்குவரத்து காவல்துறை பணியாளர்கள் மற்றும் பொதுமக்களின் ஒத்துழைப்பு முயற்சிகளின் மூலம் பசுமை வழிப்பாதை அமைக்கப்பட்டு, அதன் வழியாக உறுப்புமாற்று சிகிச்சைக்கான இந்த நுரையீரல்கள் கொண்டு வரப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

உறுப்புதானம் என்ற மிக உயர்ந்த தானத்தின் வழியாகவும் மற்றும் பல்வேறு தரப்பினரின் சிறப்பான ஒத்துழைப்பின் வழியாகவும் நீண்டகாலம் காத்திருந்த இந்த நோயாளிக்கு வாழ்க்கையின் புதிய அத்தியாயத்தை தொடங்குவதற்கான இந்த அற்புதமான வாய்ப்பு கிடைத்திருக்கிறது. உறுப்பு தானமளித்த பெண்மணியின் குடும்பத்தினரது தர்ம சிந்தனையும், தாராள மனதும், மனிதநேயத்தின் அழகையும் மற்றும் உறுப்புதானம் அளிப்பதனால் கிடைக்கும் பயனையும் நம் அனைவருக்கும் மிக நேர்த்தியாக சுட்டிக்காட்டி உறுப்புதானத்தை ஊக்குவிக்க வேண்டியதன் அவசியத்தை நினைவூட்டுகிறது.

உறுப்புமாற்று சிகிச்சையின் மூலம் ஒரு உயிர் காப்பாற்றப்படுவதை சாத்தியமாக்குவதற்கு, துரிதமான போக்குவரத்து வசதியை பசுமை வழிப்பாதை வழியாக உதவிய சென்னை, ஆவடி மற்றும் தாம்பரம் காவல்துறை ஆணையரக பணியாளர்களுக்கும் மற்றும் ஆதரவளித்த பொதுமக்களுக்கும் தமிழ்நாடு அரசின் டிரான்ஸ்டான் (TRANSTAN) அமைப்போடு இணைந்து வடபழனி காவேரி மருத்துவமனை  நன்றியை தெரிவித்தது.

Tags :
Advertisement