புதுச்சேரி சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் குண்டுகட்டாக தூக்கி வெளியேற்றம்!
புதுச்சேரியில் தலைமைச் செயலருக்கு இணையான பதவியில் உள்ள பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த விவகாரத்தில் அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும். அவை நடவடிக்கைகளை ஒத்திவைத்து, தலைமை பொறியாளர் கைது செய்யப்பட்டது தொடர்பாக விவாதம் நடத்த வேண்டும்.
தலைமை அலுவலகம் சீல் வைக்க வைக்கப்பட்டுள்ள நிலையில் துறை சம்பந்தமான பதிலை யார் அளிப்பது என சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சிவா பேரவையில் கேள்வி எழுப்பினார். சபாநாயகர் இருக்கை முன்பு தொடர்ச்சியாக கேள்வி எழுப்பிய சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரை குண்டு கட்டாக தூக்கி பேரவையிலிருந்து சபை காவலர்கள் வெளியேற்றினர். தொடர்ந்து திமுக மற்றும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
லஞ்சம் வாங்கிய புதுச்சேரி பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் தீனதயாளன் உள்ளிட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகளை சிபிஐ கைது செய்துள்ளது. இது புதுச்சேரி மாநிலத்திற்கு மிகப்பெரிய தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு தார்மீக பொறுப்பேற்று பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் பதவி விலக வேண்டுமென என வலியுறுத்தி சட்டப்பேரவையில் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் சிவா உள்ளிட்ட திமுக - காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் சபாநாயகரை முற்றுகையிட்டு தர்ணாவில் ஈடுபட்டதால், எதிர்க்கட்சி தலைவர் சிவா உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்களை அவை காவலர்கள் குண்டுகட்டாக வெளியேற்றினர்.