உடல் உறுப்பு தானம் செய்தவர்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்தி கவுரவிக்க புதுச்சேரி அரசு முடிவு!
இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது. அதில்,
“மூளைச்சாவு அடைந்து உடல் உறுப்பு தானம் செய்தவர்களுக்கு இறுதி அஞ்சலி
செலுத்தி கவுரவிக்க புதுச்சேரி அரசு முடிவு செய்துள்ளது. புதுச்சேரியில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் மூளைச்சாவு அடைந்து, உயிரிழந்தவர்களின் உடல் உறுப்புகளை அவரது உறவினர்கள் தானம் செய்ய முன் வந்தால், மருத்துவமனையின் மருத்துவ கண்காணிப்பாளர், புதுச்சேரி, காரைக்கால் பகுதியில் உள்ள மாவட்ட ஆட்சியர், ஏனாம், மாகி பிராந்தியங்களில் மண்டல நிர்வாகிகளுக்கும் தகவல் தெரிவிக்க வேண்டும். அவர்களது உடலுக்கு புதுச்சேரி அரசின் சார்பில் மரியாதை செலுத்தப்படும்.
அரசு சார்பில் பிரதிநிதியாக மாவட்ட ஆட்சியர் கலந்துகொள்ள முடியாத சூழ்நிலையில் அவருக்கு பதிலாக துணை ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டு அவர்களது வீட்டில் மலர் வளையம் வைத்து, மரியாதை
செலுத்துவார்கள். மூளைச்சாவு அடைந்து, உடல் உறுப்பு செய்தவரின் புகைப்படத்துடன், அவர்களது தியாகத்தை மக்களின் பார்வைக்கு, செய்தி விளம்பரத்துறை வாயிலாக வெளியிட வேண்டும். உடல் உறுப்பு தானம் செய்தவர் பிற மாநிலங்களை சேர்ந்தவராக இருந்தால், அந்த மாவட்ட ஆட்சியருக்கும், நோடல் அதிகாரிக்கும் தகவல் தெரிவித்து, இறுதி மரியாதை செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இறுதி அஞ்சலி மட்டுமின்றி, சுதந்திர தினம் உள்ளிட்ட முக்கிய அரசு விழாக்களிலும், உடல் தானம் செய்தவர்களின் குடும்பங்களை கவுரவிக்கப்படுவார்கள்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.