இன்று மாலை விண்ணில் பாய்கிறது PSLV-C59 ராக்கெட் - இஸ்ரோ அறிவிப்பு!
பி.எஸ்.எல்.வி. சி-59 ராக்கெட் இன்று மாலை 4.06 மணிக்கு விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ அறிவித்துள்ளது.
சூரியனை ஆராய்வதற்காக புரோபா-3 எனும் இரட்டை செயற்கைக்கோளை ஐரோப்பிய விண்வெளி ஆய்வு நிறுவனம் வடிவமைத்துள்ளது. ‘புரோபா-3’ செயற்கைகோள்கள் 550 கிலோ எடை கொண்டவை. இந்த செயற்கைக்கோள் சூரியனின் ஒளிவட்ட பகுதியை ஆய்வு செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் ஏவுதளமான, ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா, சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து நேற்று (டிச.4) மாலை 4.08க்கு மணிக்கு பிஎஸ்எல்வி சி-59 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட இருந்தது.
ராக்கெட்டுக்கான எரிபொருட்கள் நிரப்பப்பட்டு, இறுதிக்கட்ட பணியான கவுன்ட்டவுன் 25 மணி நேரமாக நிர்ணயம் செய்யப்பட்டு, நேற்று முன்தினம் (டிச.3) பிற்பகல் 3.08 மணிக்கு கவுண்டவுன் தொடங்கியது. இதனை முடித்து கொண்டு நேற்று மாலை 4.08 மணிக்கு ராக்கெட் விண்ணில் ஏவ தயாராக இருந்து. இதற்கிடையே, புரோபா-3 செயற்கைக்கோளில் கடைசி நேரத்தில் கண்டறியப்பட்ட தொழில் நுட்பக் கோளாறு காரணமாக ராக்கெட் ஏவுதல் ஒத்திவைக்கப்பட்டது. பி.எஸ்.எல்.வி சி59 ராக்கெட் இன்று மாலை 4.06 மணிக்கு விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ அறிவித்துள்ளது.
இந்த 2 செயற்கைகோள்களையும், முதலில் குறைந்தபட்சம் 600 கிலோ மீட்டர் தூரத்திலும், அதிகபட்சம் 60 ஆயிரத்து 530 கிலோ மீட்டர் உயரமுள்ள நீள்வட்ட சுற்றுவட்ட பாதையிலும் நிலை நிறுத்தி, பின்னர் இணை சுற்றுவட்டப் பாதையில் இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி சி59 ராக்கெட் நிலை நிறுத்தும். சூரியனின் மேற்புற வளிமண்டலமான கரோனாவை புரோபா-3 செயற்கைக்கோள் ஆய்வு செய்ய உள்ளது.