பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு: 475-வது நாளாக கையில் தீபம் ஏந்தி போராட்டம்!
பரந்தூர் பசுமைவெளி விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தீபாவளி திருநாளிலும் விடாமல் 475-வது நாளாக தொடர் போராட்டத்தில் ஏகனாபுரம் கிராம மக்கள் ஈடுபட்டனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் சுற்றுவட்டார 13 கிராம பகுதிகளை உள்ளடக்கி பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம் அமைக்கப்படும் என மத்திய மாநில அரசுகள் அறிவிப்பு வெளியிட்டு பணிகளை மேற்கொண்டு வருகிறது. பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம் அமைப்பதால் நெல்வாய், தண்டலம், மடப்புரம், நாகப்பட்டு, ஏகனாபுரம், மேலேறி ஆகிய கிராமங்களில் விவசாய நிலங்கள் மட்டுமின்றி குடியிருப்புகளும் அகற்றப்பட உள்ளது.
இதனால் தங்களின் இருப்பிடமும், வாழ்வாதாரமான விளைநிலங்களும் பறிபோய் விடும் எனக் கூறி விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, நாள்தோறும் இரவு நேரங்களில் ஊர் மைதானத்தில் கிராம மக்கள் ஒன்று கூடி அமர்ந்து தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தீபாவளி திருநாளான நேற்று முன் தினமும் விடாமல் 475-வது நாளாக ஏகனாபுரம் கிராம மக்கள் அனைவரும் ஒன்று கூடி கைகளில் தீபம் ஏந்தி கொடுக்க மாட்டோம், கொடுக்க மாட்டோம்,ஒரு பிடி மண்ணைக் கூட விமான நிலையம் அமைக்க கொடுக்க மாட்டோம், வேண்டாம் வேண்டாம் விமான நிலையம் வேண்டாம், என கோஷமிட்டு விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தும், விமான நிலையம் அமைக்க மாற்று இடத்தை தேர்வு செய்ய வேண்டும் என மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.