For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்” - காதுகளில் ரிங்காரமிடும் உமா ரமணன் குரல்!

11:15 AM May 02, 2024 IST | Web Editor
“பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்”   காதுகளில் ரிங்காரமிடும் உமா ரமணன் குரல்
Advertisement

தமிழ் திரையுலகில் கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக சிறந்த பாடகியாக பயணித்து வந்தவர் உமா ரமணன். இவரது வாழ்வும், திரையுலகம் குறித்த தொகுப்பு குறித்து காணலாம்...

Advertisement

தமிழ் திரையுலக இசையமைப்பாளர் இளையராஜாவின் பல பாடல்களை பாடியவர், உமா ரமணன். சுமார் 35 ஆண்டு காலங்களாக கோலிவுட் திரையுலகில் இருக்கும் இவர், பல பிரபலமான பாடல்களை பாடியிருக்கிறார். பெற்றோரின் விருப்பத்துக்காக முறையாக இசை கற்றுக்கொண்டவர் உமா ரமணன். தனது கல்லூரிக் காலங்களில் பல்வேறு போட்டிகளில் பங்கெடுத்து பரிசுகள் பல வெல்கிறார்.

உமா ரமணன், சினிமாவில் காலடி எடுத்து வைப்பதற்கு முன்பாக பல மேடை நிகழ்ச்சிகளில் பாடி வந்துள்ளார். இவரை பார்த்த அப்போதைய பிரபலம் ஒருவர், ஒரு இந்தி படத்தில் இவருக்கு பாடல் பாட வாய்ப்பு கொடுத்திருக்கிறார். இந்த சமயத்தில், தனது வருங்கால கணவரான ஏ.வி.ரமணனை சந்திக்கிறார். அவரோ, தான் நடத்திவரும் மேடைக் கச்சேரிகளில் பாடல்களைப் பாடுவதற்கான பெண் குரலைத் தேடிக் கொண்டிருக்கிறார். உமா ரமணின் குரல் அவரது கச்சேரிக்கும், வாழ்க்கைக்கும் ஆதார ஸ்ருதியாக மாறுகிறது. இருவரும் இணைந்து ஆயிரக்கணக்கான மேடைக் கச்சேரிகளில் பாடி வருகின்றனர்.

ஏ.வி.ரமணன், உமா ரமணன் இருவரும் இணைந்து ‘பிளே பாய்’ என்ற இந்தி திரைப்படத்தில் பாடினர். அதன்பின்னர் எஸ்.வி.வெங்கட்ராமன் இசையில் 1977-ம் ஆண்டு 'கிருஷ்ணலீலா' என்ற படத்தில் ஒரு பாடலை பாடினர். இந்த நேரத்தில்தான் 1980-ல் இளையராஜா இசையில் ‘நிழல்கள்’ திரைப்படம் வெளியானது. இதையடுத்து தமிழிலிலும் இவருக்கு பாடல்கள் பாட பல்வேறு வாய்ப்புகள் கிடைத்துள்ளது. இளையராஜா அறிமுகம் செய்து வைத்து பல நாட்கள் திரைத்துறையில் இருந்த ஒரு பாடகி உமா ரமணன். பல சூப்பர் ஹிட் பாடல்களை இளையராஜாவின் இசையில் இவர் பாடியுள்ளார்.

இளையராஜாவின் இசையில் உருவான நிழல்கள், மூடுபனி, பன்னீர் புஷ்பங்கள் உள்ளிட்ட பல படங்களில் இவர் பாடல்களை பாடியுள்ளார். குறிப்பாக, 1981-ம் ஆண்டு வெளியான பன்னீர் புஷ்பங்கள் படத்தில் இடம் பெற்றிருந்த ‘ஆனந்த ராகம்’ பாடல் இவருக்கு பெரும் பெருமையை தேடி தந்தது.  1981-ம் ஆண்டில் ‘கோவில் புறா’ திரைப்படத்தில் ‘அமுதே தமிழே’ பாடலை உமா ரமணன் பாடியிருப்பார். உமா ரமணின் மற்றொரு சிறப்பாக கூறப்படுவது அவரது மொழி உச்சரிப்பு. அவர் பாடிய பல பாடல்களில் இதை நன்றாக உணர முடியும்.

1982-ல் ‘தூறல் நின்னுப் போச்சு’ படத்தில் ‘பூபாளம் இசைக்கும்’ பாடலை ஜேசுதாஸுடன் இணைந்து உமா ரமணன் பாடல் எத்தனை முறை கேட்டாலும் திகட்டாது என கூறப்படும் பாடல்களில் ஒன்று. அதே ஆண்டு இளையராஜாவுடன் இணைந்து பகவதிபுரம் ரயில்வே கேட் திரைப்படத்தில்  ‘செவ்வரளித் தோட்டத்துல’ பாடலை பாடி கவனம் ஈர்த்தார். தொடர்ந்து இளையராஜாவுடன் ‘வைதேகி காத்திருந்தாள்’ படத்தில் ‘மேகங் கருக்கையிலே’ பாடலையும், பாட்டுப் பாடவா படத்தில் ‘நில் நில் நில்’ பாடலையும் உமா ரமணன் பாடினார். 

உமா ரமணன் - ஜேசுதாஸ் காம்போவில் இணைந்து பாடிய அனைத்துப் பாடல்களுமே ஸ்பாட்டிஃபை காலத்திலும் அசைக்க முடியாதவை. ‘கஸ்தூரி மானே’,  ‘கண்ணனே நீ வர’, ‘ஆகாய வெண்ணிலாவே’,  ‘நீ பாதி நான் பாதி’ என ஒவ்வொரு பாடலும் இன்றளவும் மறக்கமுடியாதவை. எம்எஸ்வி, சங்கர் - கணேஷ், டி.ராஜேந்தர், தேவா, எஸ்.ஏ.ராஜ்குமார், சிற்பி, மணி சர்மா, ஸ்ரீகாந்த் தேவா, வித்யாசாகர் என பல இசையமைப்பாளர்களின் இசையில் உமா ரமணன் பாடல்களை பாடியிருக்கிறார்.

சிவகாசி படத்தில் வரும் "இது என்ன இது என்ன புது மயக்கம்" என்கின்ற பாடலையும், திருப்பாச்சி படத்தில் வரும் "கண்ணும் கண்ணும் தான் கலந்தாச்சு" என்கின்ற பாடலையும் பாடியது உமா ரமணன் தான். 

இளையராஜா இசையில் உமா ரமணின் குரலில் வந்த பாடல்களுக்கு தனி ரசிகர் பட்டாளமே இருக்கும். 1980-ம் ஆண்டு ஆரம்பித்த இவரது இசைப்பயணம், இளையராஜாவில் தொடங்கி இளையராஜாவுடனே முடிந்திருக்கிறது. எண்ணற்ற பாடல்களை பாடியதோடு மட்டுமன்றி, 6000த்திற்கும் மேற்பட்ட மேடை நிகழ்ச்சிகளிலும் பாடியுள்ளார். ஏ.வி.ரமணன் - உமா ரமணன் இருவரும் ஒரு நேர்காணலில் கலந்து கொண்ட போது, தாங்கள் இணைந்து பல்வேறு பாடல்களை பாடியிருந்தாலும் தங்களால் ஒன்றாக இளையராஜாவின் இசையில் பாட முடியவில்லை என்று கூறியுள்ளனர்.

உமா ரமணன், தனது குடும்பத்தினருடன் சென்னையில் வசித்து வந்தார். இவரது மகன், விக்ணேஷ் ரமனணும் பாடகர்தான். கடந்த சில நாட்களாகவே உமா, உடல் நிலை சரியில்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், இவர் நேற்று (மே 1) இரவு உயிரிழந்துள்ளார். 

சக்கைப்போடு போட்ட பாடல்கள்:

  • ஆனந்த ராகம்-பன்னீர் புஷ்பங்கள்
  • அமுதே தமிழே-கோவில் புறா
  • கஸ்தூரி மானே-புதுமை பெண்
  • நீ பாதி நான் பாதி பெண்ணே-கேளடி கண்மணி
  • ஆகாய வெண்ணிலாவே-அரங்கேற்ற வேலை
  • வெள்ளி நிலவே-நந்தவன தேர்
  • ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி - மகாநதி
  • பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம் - தூறல் நின்னு போச்சு

உமா ரமணனின் மறைவையொட்டி, தமிழ் திரையுலகை சேர்ந்த பலரும், அவரது குரலின் ரசிகர்களும் இரங்கல் பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.   

Tags :
Advertisement