புரோ கபடி லீக் | யு மும்பாவை வீழ்த்தியது யுபி யோத்தாஸ்!
புரோ கபடி லீக் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. தற்போது டெல்லியில் லீக் ஆட்டங்கள் நடந்து வருகிறது. இந்த தொடரில் நேற்று (அக்.13) 2 லீக் ஆட்டங்கள் நடைபெற்றது. அதன்படி இரவு 8 மணிக்கு தொடங்கிய முதல் ஆட்டத்தில் பாட்னா பைரேட்ஸ் - ஹரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் மோதின. ஆட்டம் தொடங்கியதில் இருந்து இரு அணிகளும் பரபரப்பாக புள்ளிகளை சேகரிக்க தொடங்கின.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் இறுதியில் 39-32 என்ற புள்ளிக்கணக்கில் பாட்னாவை வீழ்த்தி ஹரியானா வெற்றி பெற்றது. தொடர்ந்து நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் யு மும்பா அணி யுபி யோத்தாஸை எதிர்கொண்டது. அதிரடியாக ஆட்டத்தை தொடங்கிய இரு அணி வீரர்களும் மாறி மாறி புள்ளிகளை அள்ளினர்.
ஆட்டம் பரபரப்பாக நடந்த நிலையில் எந்த அணி வெற்றி பெற போகிறது என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்திருந்தனர். முடிவில் அதிரடியாக ஆடிய யுபி யோத்தாஸ் அணி 40 - 24 என்ற புள்ளி கணக்கில் அபார வெற்றி பெற்றது. இதனையடுத்து இன்று நடைபெறும் ஆட்டங்களில் பாட்னா பைரட்ஸ் - குஜராத் ஜெயன்ட்ஸ் அணியும், யுபி யோத்தாஸ் - தமிழ் தலைவாஸ் அணிகளும் மோதுகின்றன.