SSMB 29 படத்தில் மந்தாகினியாக பிரியங்கா சோப்ரா : கதாபாத்திர அறிமுக போஸ்டரை வெளியிட்ட படக்குழு…!
இந்திய சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் எஸ்.எஸ் ராஜமவுலி. இவர் இயக்கத்தில் வெளியான பாகுபலி 1 மற்றும் 2 ஆம் பாகங்கள், ஆர்.ஆர்.ஆர் ஆகிய படங்கள் இந்திய அளவில் பெரும் வெற்றியை பெற்றன. மேலும் அவை பாலிவுட் படங்கள் தான் இந்திய படங்கள் என்று இருந்த நிலையை மாற்றியது.
ராஜமவுலி அடுத்ததாக இயக்கி வரும் படத்தில் தெலுங்கு சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபு கதாநாயகனாக நடிக்கிறார். இப்படம் மகேஷ் பாபுவின் 29 ஆவது படமாகும். மேலும் இப்படத்தில் பிரியங்கா சோப்ரா, பிரித்திவிராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படம் காசியின் வரலாற்றை பேசும் படமாக உருவாகி வருகிறது. ஒடிஷா மற்றும் ஹைதராபாத்தை தொடர்ந்து தற்போது தென்னாப்பிரிக்காவில் அடுத்த கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. மேலும் சமீபத்தில் வாரணாசி என்று இப்படத்திற்கு தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் வீடியோ வெளியீட்டு நிகழ்வு நவம்பர் 15-ம் தேதி ஐதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது.
இதனிடையே சமீபத்தில் படத்தில் நடிக்கும் பிரித்திவிராஜின் கதாப்பாத்திர அறிமுக போஸ்டரை படக்குழு வெளியிட்டது. அந்த வகையில் தற்போது பிரியங்கா சோப்ராவின் கதாபாத்திர போஸ்டரை இயக்குநர் ராஜமவுலி வெளியிட்டுள்ளார். அப்போஸ்டரில் படத்தில் மந்தாகினி என்ற கதாபாத்திரத்தில் பிரியங்கா சோப்ரா நடிக்கிறார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.