ஏற்காடு தனியார் பேருந்து விபத்து - உயிரிழப்பு எண்ணிக்கை 7 ஆக உயர்வு!
ஏற்காடு மலைப்பாதையில் தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.
சேலம் மாவட்டம், ஏற்காடு காட்டுரோடு முனியப்பன் கோயில் அருகே சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்று வளைவில் திரும்பும்போது கட்டுப்பாட்டை இழந்து தலைகீழாக கவிழ்ந்துள்ளது. இந்த விபத்தை பார்த்த அருகிலிருந்த பொதுமக்கள் தீயணைப்பு துறையினருக்கும், ஆம்புலன்ஸ்க்கும் தகவல் தெரிவித்துள்ளனர். இந்த தகவலையடுத்து 5க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து, விபத்தில் சிக்கியவர்களை தீயணைப்பு துறையினரும், ஆம்புலன்ஸ் ஊழியர்களும் மீட்டுள்ளனர்.
இந்த விபத்தில் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில், ஒரு சிறுவன் உட்பட நான்கு பேர் உயிரிழந்தனர். காயமடைந்தோர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.