பிரதமர் மோடி வருகை - மதுரையில் போக்குவரத்து மாற்றம்!
பிரதமர் நரேந்திர மோடி மதுரைக்கு வருவதையோட்டி 2 நாட்களுக்கு போக்குவரத்தில் மாற்றம் செய்து மதுரை மாவட்ட காவல்துறை உத்தரவிட்டுள்ளது.
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் ”என் மண் என் மக்கள்” யாத்திரையின் இறுதி நிகழ்வு வரும் 27-ம் தேதி திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள மாதப்பூரில் நடைபெறுகிறது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார். இந்த விழாவை முடித்து அதன் பின்னர் ஹெலிகாப்டரில் இருந்து மதுரை செல்கிறார்.
இதனைத்தொடர்ந்து மதுரையில் உள்ள டி.வி.எஸ் லட்சுமி பள்ளியில் 'டிஜிட்டல் மொபிலிட்டி இனிஷியேட்டிவ் ஃபார் ஆட்டோமோட்டிவ் எம்.எஸ்.எம்.இ.’ என்ற தலைப்பில் சிறு, குறு, நடுத்தர வர்த்தக தொழில் அதிபர்கள் கலந்து கொள்ளும் டிஜிட்டல் வர்த்தக மாநாட்டில் மோடி பங்கேற்க உள்ளார்.
பிப்ரவரி 27 ஆம் தேதி இரவு மதுரையில் தங்கும் மோடி 28 ஆம் தேதி காலை தூத்துக்குடி செல்கிறார். பிரதமர் மோடி வருகையையொட்டி பாதுகாப்பு பணிக்காக சுமார் 6000 முதல் 10000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.