பரப்புரைக்கிடையே கால்பந்து விளையாடிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
வடசென்னை தொகுதி திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமியை ஆதரித்து வாக்கு சேகரிக்க சென்ற போது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கால்பந்து விளையாடினார்.
தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் ஒரே கட்டமாக வரும் 19-ம் தேதி நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ம் தேதி நடைபெறுகிறது. இன்னும் தேர்தலுக்கு சில நாட்களே உள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன. இதனால், தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
இந்த நிலையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னை, கொளத்தூர், ஐ.சி.எப். பகுதிகளில் திமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். வடசென்னை தொகுதி வேட்பாளர் கலாநிதி வீராசாமி மற்றும் மத்திய சென்னை தொகுதி வேட்பாளர் தயாநிதி மாறன் ஆகியோருக்கு ஆதரவாக திறந்த ஜீப்பில் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தார்.
அப்போது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அங்குள்ள விளையாட்டு மைதானத்துக்கு சென்று அங்கு பயிற்சி செய்துகொண்டிருந்த கால்பந்து விளையாட்டு வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். மேலும், அவர்களுக்கு ஏதேனும் வசதிகள் தேவைப்படுகிறதா என்று அவர் கேட்டறிந்தார். இதனைத் தொடர்ந்து, அவர் அங்கிருந்த வீரர்களுடன் கால்பந்து விளையாடி மகிழ்ந்தார்.