கனடா சென்றடைந்தார் பிரதமர் மோடி... ஜி7 மாநாட்டில் பங்கேற்கிறார்!
உலகின் மிகப்பெரிய பொருளாதாரங்களை கொண்ட கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், பிரிட்டன் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் ஒன்றிணைந்து ஜி7 என்ற அமைப்பை உருவாக்கின. இந்த குழுவில் உள்ள உறுப்பு நாடுகளில் ஒன்றில் ஆண்டுதோறும் ஜி7 உச்சி மாநாடு நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டுக்கான ஜி7 உச்சி மாநாடு கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணம் கனனாஸ்கிஸ் நகரில் நேற்று முன் தினம் தொடங்கியது.
இந்த மாநாடு இன்று நிறைவடைகிறது. ஜி7 உச்சி மாநாடில் கலந்துகொள்ளும்படி இந்திய பிரதமர் மோடிக்கு கனடா பிரதமர் அழைப்பு விடுத்தார். அந்த வகையில், ஜி7 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் மோடி கனடா சென்றுள்ளார். கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணம் கால்கரி நகருக்கு சென்ற பிரதமர் மோடியை விமான நிலையத்தில் கனடா அதிகாரிகள் வரவேற்றனர்.
பிரதமர் மோடி கனனாஸ்கிஸ் நகரில் நடைபெறும் ஜி7 மாநாட்டில் கலந்துகொள்ளும் நிலையில் இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்பட பல உலகத்தலைவர்கள் பங்கேற்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மாநாட்டில் பங்கேற்று பிரதமர் மோடி உரையாற்றவுள்ளாா். மேலும், பல்வேறு நாடுகளின் தலைவா்களுடன் இருதரப்பு பேச்சுவாா்த்தையும் நடத்தவுள்ளாா். தொடர்ந்து, நாளை குரோஷியாவிற்கு பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி, அந்நாட்டின் அதிபா் ஸோரன் மிலனோவிச், பிரதமா் ஆண்ட்ரேஜ் பிலென்கோவிச் ஆகியோரை சந்தித்துப் பேசவுள்ளாா்.