மணிப்பூர் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்!
மணிப்பூரில் மாநிலத்தில் கடந்த 2023ஆம் ஆண்டு மெய்தேய் மற்றும் குக்கி இன மக்களிடையே கலவரம் ஏற்பட்டது. மெய்தேய் இன மக்களுக்குப் பட்டியல் பழங்குடியினர் அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கையே கலவரத்திற்கு முக்கிய காரணமாக கருதப்பட்டது. மணிப்பூர் கலவரம் தொடர்பாக மக்களவையில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவோம் என எதிர்கட்சிகள் கூறியது.
மணிப்பூர் ஏற்பட்ட இந்த இனக் கலவரத்திற்கு பாஜக முதலமைச்சர் பைரன் சிங்கிற்கு தொடர்பு உள்ளதாக ஆடியோ பதிவுகள் வெளியானது இதையடுத்து பிரேன் சிங் கலவரத்தை தூண்டியதாக குக்கி இனப்பிரிவு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் முதலமைச்சர் பிரேன் சிங்கின் குரல் பதிவை மத்திய அரசின் தடய அறிவியல் சோதனை மையம் ஆய்வு செய்து, அறிக்கையை சீலிட்ட கவரில் வைத்து தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. தொடர்ந்து கடந்த பிப்.07ஆம் தேதி அம்மாநில ஆளுநர் அஜய் குமார் பல்லாவிடம் தனது ராஜிநாமா கடிதத்தை பைரன் சிங் வழங்கினார். பிரேன் சிங் ராஜிநாமா செய்ததிலிருந்து, மணிப்பூரில் உள்ள பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் அடுத்த முதலமைச்சரை தேர்ந்தெடுக்க முயற்சித்தனர். அதில் ஒருமித்த கருத்து ஏற்படாமல் பேச்சு வார்த்தை தொடர்ந்தது.
இந்த நிலையில் மணிப்பூர் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், மணிப்பூர் மாநிலத்தின் அரசாங்கத்தை அரசியலமைப்பின் விதிகளின்படி முன்னெடுக்க முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. அதனால் 356வது அரசியலமைப்பு பிரிவின்படி அங்கு குடியரசு தலைவர் ஆட்சி அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.