சக்திவாய்ந்த நிலநடுக்கம் - ரஷ்யாவை தாக்கிய சுனாமி அலைகள்!
ரஷியாவின் கம்சத்கா தீபகற்ப பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 8.7 ஆக பதிவாகி உள்ளது. இதையடுத்து ஜப்பான் மற்றும் அமெரிக்க சுனாமி எச்சரிக்கை மையத்தில் இருந்து சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இது குறித்து அமெரிக்க புவியியல் மையம் வெளியிட்ட செய்தியில், அவச்சா என்ற கடலோர நகரத்தில், கம்சாத்ஸ்கை நகரில் இருந்து கிழக்கு-தென்கிழக்கே 125 கி.மீ. தொலைவில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. எனினும், பின்னர் அது 8.0 என திருத்தி அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து கம்சத்கா பகுதியில் 3 முதல் 4 மீட்டர் உயரத்திற்கு கடல் அலைகள் பதிவாகியுள்ளதால், சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. இதனால் அடுத்த 3 மணி நேரத்தில் தீவிர சுனாமி அலைகள் எழும்ப கூடும் என அமெரிக்காவும் எச்சரித்துள்ளது.
இதனால், பிலிப்பைன்ஸ், பலாவ், மார்ஷல் தீவுகள், சூக், கொஸ்ரே பகுதிகளில் ஒன்று முதல் 3.3 அடி உயரத்திற்கு சுனாமி அலைகள் எழும்ப கூடும். தென்கொரியா, வடகொரியா மற்றும் தைவானில் ஓரடிக்கு மேல் உயரத்தில் அலைகள் எழும்பும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பான் கடலோர பகுதிகளில் 3 அடி உயரத்திற்கு கடலலைகள் எழும் என அந்நாட்டு வானிலை மையம் எச்சரித்து உள்ளது.
இந்நிலையில், சுனாமி அலைகள் பல அடி உயரத்திற்கு எழும்பியுள்ளது. ரஷியாவின் பல்வேறு பகுதிகளிலும் நிலநடுக்கம் பற்றிய வீடியோக்களும் வைரலாகி வருகின்றன. அதில், வீடியோவில் வீட்டின் உள்ளே இருந்த நாற்காலி, மேஜை போன்ற பொருட்கள் ஆடும் காட்சிகள் காணப்படுகின்றன.
அமெரிக்காவின் மேற்கு கடலோரம் மற்றும் ஹவாய் பகுதியிலும் சுனாமி கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இது குறித்து அமெரிக்க அதிபர் டிரம்பும் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஜப்பானின் பசிபிக் கடலோரத்தில் காலை 10 மணி முதல் 11.30 மணிக்குள் சுனாமி அலைகள் தாக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று ஜப்பானிய வானிலை மையம் தெரிவித்து உள்ளது.