துருக்கியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் - 7 பேர் காயம்!
துருக்கி நாட்டின் கடற்கரை நகரமான மர்மரிசில் இன்று அதிகாலை 2.15 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 5.8ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தை துருக்கியின் பேரிடர் மேலாண்மை நிறுவனம் உறுதிப்படுத்தி இருக்கிறது. இதனால், இரவில் உறங்கிக்கொண்டிருந்த மக்கள் அச்சத்துடன் எழுந்து வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர்.
இந்த நிலநடுக்கம் மத்திய தரைக்கடலில் மையம் கொண்டிருந்த நிலையில் கிரீசில் உள்ள தீவான ரோட்ஸ் உள்ளிட்ட அண்டை பகுதிகளிலும் உணரப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தின் போது கட்டடங்கள் குலுங்கியுள்ளது.
இதன் காரணமாக சிலர் நிலநடுக்கத்தில் இருந்து தப்பிக்க வீடுகளில் இருந்து ஜன்னல் வழியாக வெளியே குதித்தனர். இந்த சம்பவத்தில் 7 பேர் காயமடைந்துள்ளனர். இதையடுத்து காயமடைந்த 7 பேரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலநடுக்கத்தில் உயிரிழப்பு சம்பவங்கள் ஏற்படவில்லை என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. முன்னதாக, கடந்த 2023ம் ஆண்டு துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 53 ஆயிரம் பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.