இதழியல் படிப்புகளை நிறுத்தும் பிரபல கல்வி நிறுவனம் - ஏன் தெரியுமா?
இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஜர்னலிசம் அண்ட் நியூ மீடியா, இதழியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை நிறுத்த முடிவு செய்துள்ளது.
பெங்களூருவில் உள்ள புகழ்பெற்ற பத்திரிகை நிறுவனங்களில் ஒன்றான இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஜர்னலிசம் அண்ட் நியூ மீடியா (IIJNM) கடந்த 24 ஆண்டுகளாக இந்தியாவின் முன்னணி இதழியல் பள்ளிகளில் ஒன்றாக இருந்து வந்தது. இந்நிறுவனம் இந்த ஆண்டு முதல் இதழியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை நிறுத்த முடிவு செய்துள்ளது. இந்த படிப்புகளில் மாணவர்களின் சேர்க்கை எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருவதால் அந்நிறுவனம் இம்முடிவை எடுத்துள்ளது.
இந்நிறுவனம் இந்த படிப்புகளில் மாணவர் சேர்க்கையை நிறுத்த முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகின. இது குறித்து ஐஐஜேஎன்எம்-இன் டீன் காஞ்சன் கவுர் கூறுகையில், “ஆம் நாங்கள் மூடுகிறோம். நாங்கள் எதிர்பார்த்த அளவுக்கு மாணவர்களின் சேர்க்கை எண்ணிக்கை இல்லை. கடந்த ஆண்டை விட கணிசமாக குறைந்துள்ளது. இதனால் இந்தாண்டு முதல் இந்த படிப்புகளில் மாணவர் சேர்க்கையில் நிறுத்த முடிவு செய்துள்ளோம்" என்றார்.
மாணவர்கள் செலுத்திய கட்டணத்தை திருப்பி தருவதாகவும், மாணவர்கள் தங்கள் வங்கி விவரங்களை அனுப்புமாறும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. வங்கி விவரங்கள் கிடைத்த 10 நாட்களுக்குள் பணத்தை திருப்பித் தருவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு பெங்களூரில் உள்ள மற்றொரு பிரபலமான பத்திரிகை பள்ளியும் 23 ஆண்டுகளுக்குப் பிறகு மூடப்பட்டது.