போப் பிரான்சிஸ் மருத்துவமனையில் அனுமதி!
கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ் (88), மூச்சுக்குழாய் அழற்சிக்கான பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைக்காக ரோமில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வாத்திக்கன் அரசு தெரிவித்துள்ளது.
சமீப நாட்களாக மூச்சுத் திணறல் நோயால் பாதிக்கப்பட்டிருந்த போப் தனது உரைகளைப் படிக்க அதிகாரிகளை நியமித்திருந்தார். இந்நிலையில் இன்று காலை நேரக் கூட்டத்திற்கு பின் ரோமின் ஜெமெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சிறுவயதிலேயே தனது நுரையீரலின் ஒரு பகுதியை அகற்றிக் கொண்ட போப், கடந்த சில நாட்களாக சுவாசக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டிருந்தார். முன்னதாக இதே மருத்துவமனையில் குடல் அறுவை சிகிச்சைக்காக கடந்த 2021-ம் ஆண்டு ஜூலை மாதம் 10 நாட்கள் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து 2023-ம் ஆண்டு ஜூலை மாதம் அதே மருத்துவமனையில் அவருக்கு குடலிறக்கத்தை சரிசெய்வதற்கான அறுவை சிகிச்சை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.