பொங்கல் தொடர் விடுமுறை: சொந்த ஊருக்கு படையெடுக்கும் மக்கள்!
பொங்கல் விழா முன்னிட்டு பொதுமக்கள் இன்று வெள்ளிக்கிழமை முதலே சொந்த ஊருக்குப் படையெடுக்க ஆரம்பித்துவிட்டனர்.
தமிழர் திருநாளாம் பொங்கல் விழா அடுத்த வாரம் கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு பொங்கல் விடுமுறை திங்கள்கிழமை வருகிறது. அதற்கு முன்பு இரு நாட்கள் வார இறுதி விடுமுறை என்பதால், பொதுமக்கள் இன்று வெள்ளிக்கிழமை முதலே சொந்த ஊருக்குப் படையெடுக்க ஆரம்பித்துவிட்டனர்.
இதற்காகத் தலைநகர் சென்னை உட்பட மாநிலத்தின் பல்வேறு முக்கிய ஊர்களிலும் சிறப்புப் பேருந்துகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இன்று பலரும் ஒரே நேரத்தில் சென்னையை விட்டு வெளியேறுவார்கள் என்பதால் புறநகர்ப் பகுதிகளில் டிராபிக் நெரிசல் ஏற்படும்.
சென்னையில் இருந்து மட்டும் சுமார் 10 லட்சத்திற்கும் அதிகமானோர் குடும்பத்துடன் சொந்த ஊருக்கு செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே தீபாவளி சமயத்தில் இதேபோன்ற எண்ணிக்கையில் மக்கள் சொந்த ஊர்களுக்கு சென்று திரும்பினார்கள்.
பலரும் இந்த வார இறுதியில் அல்லது பொங்கல் முடிந்த மறு நாள் சுற்றுலா செல்ல திட்டமிடுவார்கள் என்பதால், சுற்றுலா தளங்களில் அதிக கூட்டம் நிரம்பி வழிய வாய்ப்பு உள்ளது.