அதிமுக நிர்வாகியை ஆபாசமாக பேசி தாக்கிய காவல் உதவி ஆய்வாளர் ஆயுதப்படைக்கு மாற்றம்!
காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அடுத்த பனப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் ரவி
(53). இவர் அதிமுகவில் மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளராக பதவி வகித்து வருகிறார். இந்த நிலையில், விபத்து தொடர்பாக ஒரகடம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க அதிமுக நிர்வாகி ரவி காவல் நிலையம் சென்றுள்ளார்.
அப்போது, காவல் நிலைய நுழைவாயிலில், வரவேற்பு பகுதியில் இருந்த எஸ்.ஐ.
சிலம்பரசன், ரவியை அழைத்து புகார் தொடர்பாக விசாரித்துள்ளார். மேலும், ஏன்
தன்னை சந்திக்காமல், காவல் ஆய்வாளரை சந்தித்தீர்கள் என கேட்டு, ரவியிடம்
வாக்குவாதம் செய்தார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது.
அந்த சமயத்தில், எஸ்.ஐ. சிலம்பரசன் ரவியை ஆபாசமாக பேசி, அவரது முகத்தில்
சரமாரியாக தாக்குதல் நடத்தினார். இந்த சம்பவத்தை புகார் அளிக்க உடன் சென்ற இளைஞர்கள் சிலர் வீடியோ எடுத்துள்ளனர். மேலும் தாக்குதலுக்கு ஆளான ரவி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு முதலுதவி சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளார்.
எஸ்.ஐ., தாக்கியது தொடர்பாக, அதிமுக நிர்வாகி ரவி ஒரகடம் காவல் நிலையத்தில், ஸ்ரீபெரும்புதூர் டி.எஸ்.பி. கீர்த்திவாசனை சந்தித்து
புகார் கொடுத்துள்ளார். இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வந்த நிலையில் டிஎஸ்பி கீர்த்தி வாசன் பரிந்துரையின் பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகம், எஸ்.ஐ. சிலம்பரசனை ஆயதப்படை நெடுஞ்சாலை ரோந்து பணிக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார். அதிமுக நிர்வாகியை தாக்கிய எஸ்.ஐ ஆயுதப்படைக்கு மாற்றப்பட்ட சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது