பிறந்தநாள் விழாவில் கஞ்சா... பிரபல பாடகி மங்கிலி மீது போலீசார் வழக்குப்பதிவு!
ஹைதராபாத் சேவல்லா பகுதியில் உள்ள திரிபுரா ரிசார்ட்டில், தெலுங்கு நாட்டுப்புற பாடகி மங்கிலி பிறந்தநாள் கொண்டாட்டம் நேற்று இரவு நடைபெற்றது. பாடகியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கஞ்சா, வெளிநாட்டு மது ஆகியவற்றை பயன்படுத்துவதாக சேவல்லா போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தகவல் அடிப்படையில் அங்கு குழுவாக சென்ற போலீசார் ரிசார்ட்டில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அவர்களை தடுத்து நிறுத்த மங்கிலி முயன்றார். ஆனால் அதனை மீறி போலீசார் அங்கு ஆய்வு செய்தனர். இதனையடுத்து அங்கு போலீஸ் அனுமதி இல்லாமல் டிஜே கச்சேரிக்கு ஏற்பாடு செய்திருந்ததை அறிந்த போலீசார், அதற்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்களை பறிமுதல் செய்தனர்.
மேலும் அனுமதி இல்லாமல் வெளிநாட்டு மது வகைகளை விருந்தினர்களுக்கு கொடுத்ததும் தெரியவந்தது. இதனையடுத்து வெளிநாட்டு மது பாட்டில்களையும் போலீசார் கைப்பற்றினர். இதுதவிர சிலர் கஞ்சா போதையில் இருந்ததை பார்த்த போலீசார் அவர்களை அழைத்துச் சென்று மருத்துவமனைக்கு ரத்தப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்து மங்கிலி மீது அனுமதியில்லாமல் டிஜே கச்சேரி ஏற்பாடு செய்தது, அனுமதி இல்லாமல் வெளிநாட்டு மது வகைகளை விருந்தினர்களுக்கு விநியோகம் செய்தது, கஞ்சா பயன்படுத்த அனுமதி அளித்தது ஆகியவற்றின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.
மங்கிலி பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்ட விருந்தினர்கள் கஞ்சா
பயன்படுத்தினார்களா என்று கண்டுபிடிப்பதற்காக அவர்களை மருத்துவ பரிசோதனைக்கு போலீசார் உட்படுத்திய நிலையில், பலருக்கு மருத்துவ பரிசோதனையில் பாசிட்டிவ் ரிப்போர்ட் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது. ஒஎஸ்ஆர் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சி காலத்தில், மங்கிலி திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பக்தி சேனல் ஆலோசகராக ஆந்திர அரசால் பரிந்துரை செய்யப்பட்டு நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.