கோவையில் ரவுடி மீது போலீஸ் துப்பாக்கிச் சூடு நடத்தியதால் பரபரப்பு!
கோவை மாவட்டம் கோவில்பாளையத்தை சேர்ந்தவர் ரவுடி ஹரிஸ்ரீ. இவருக்கு திருச்சியை சேர்ந்த சக்திவேல் என்பவருடன் கோவில்பாளையம் பகுதியில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த ஹரிஸ்ரீ சட்டவிரோதமாக மறைத்து வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கியை எடுத்து வானில் சுட்டு சக்திவேலை மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இது குறித்து சக்திவேல் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து ஹரிஸ்ரீயை கைது செய்தனர்.
பின்னர், அவரிடம் இருந்து துப்பாக்கியை கைப்பற்ற முயன்ற போது ஹரிஸ்ரீ திடீரென தப்பிக்க முயற்சித்து போலீசாரை சுட முயன்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து தற்காப்புக்காக போலீசார் ஹரிஸ்ரீயின் இடது காலில் துப்பாக்கியால் சுட்டு பிடித்துள்ளனர்.
பின்னர் படுகாயம் அடைந்த ஹரிஸ்ரீயை மீட்டு கோவையில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார். கைது செய்யப்பட்ட ஹரிஸ்ரீ மீது ஏற்கனவே பீளமேடு காவல் நிலையத்தில் ஆயுத தடைச் சட்டத்தின் கீழ் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.