பெங்களூர் : பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 17 வயது சிறுமிக்கு உதவுவதாக கூறி, பாலியல் வன்கொடுமை செய்த காவல் துறையினர்!
கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள பொம்மனஹள்ளி பகுதியில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் விக்கி. ஏற்கனவே திருமணமான விக்கி, கடந்த ஆண்டு மே மாதம் முதல் 17 வயது சிறுமியை திருமணம் செய்துகொள்வதாக கூறி, பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததோடு அடித்து துன்புறுத்தியுள்ளார்.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான சிறுமி தனது தாயிடம் இந்த சம்பவம் குறித்து தெரிவித்துள்ளார். அதைத் தொடர்ந்து சிறுமியின் தாய் பொம்மனஹள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் . இதனைத் தொடர்ந்து, காவல் நிலையத்தில் கான்ஸ்டபிளாக பணிபுரியும் காவலர் அருண் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நீதி வழங்குவதாகவும், வேலை வாங்கித் தருவதாகவும் உறுதியளித்துள்ளார்.
இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் கான்ஸ்டபிள் அருண் அச்சிறுமியை ஒரு ஹோட்டலுக்கு அழைத்து சென்று, போதைப்பொருள் கலந்த மதுவை குடிக்க வைத்து, பின்னர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். ஒரு வாரத்திற்க்கு மூன்று முறை இதேபோலே மதுவை கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.
சிறுமியின் அந்தரங்க வீடியோக்கள் தன்னிடம் இருப்பதாகவும், இதைப்பற்றி வெளியே சொன்னால் அவற்றை இணையத்தில் பதிவேற்றி வைரலாக்கி விடுவேன் என்றும் கான்ஸ்டபிள் அச்சிறுமியை மிரட்டியுள்ளார்.
இதனை தாயிடம் அச்சிறுமி தற்போது கூறிய நிலையில், தாயார் அளித்த புகாரின் பேரில் பொம்மனஹள்ளி காவல் நிலையத்தில் பணியாற்றும் கான்ஸ்டபிள் அருண் மற்றும் பக்கத்து வீட்டு விக்கி இருவரையும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.