For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

விஷச்சாராய வழக்கு: மாதேஷிடம் நடத்திய விசாரணையில் அடுத்தடுத்து வரும் அதிர்ச்சித் தகவல்கள்!

02:15 PM Jun 22, 2024 IST | Web Editor
விஷச்சாராய வழக்கு  மாதேஷிடம் நடத்திய விசாரணையில் அடுத்தடுத்து வரும் அதிர்ச்சித் தகவல்கள்
Advertisement

கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கு தொடர்பாக குற்றவாளி சின்னதுரையை தொடர்ந்து, மாதேஷிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisement

கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி உடல்நலம் பாதிக்கப்பட்ட கருணாபுரம் மற்றும் பிற பகுதிகளைச் சேர்ந்த 132 பேர் கள்ளக்குறிச்சி,  சேலம், விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும், புதுச்சேரி ஜிப்மர் மருத்துமனையிலும் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் 21 பேர் ஜூன் 19 அன்று உயிரிழந்தனர். இதேபோல ஜூன் 20 அன்று மேலும் 19 பேர் இறந்தனர்.

இதனிடையே, சேலம் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டகளில் 15 பேர் நேற்று (ஜூன் 21) உயிரிழந்தனர்.  இதன்மூலம், கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 51 ஆக உயர்ந்திருந்தது. இந்நிலையில் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் 90 நபர்களில் 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதன் மூலம்  பலி எண்ணிக்கை 54 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது 112 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவர்களின் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. இதனிடையே நேற்று சின்னதுரையிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அதேபோல், குற்றவாளி மாதேஷிடம் விசாரணை நடத்தப்பட்டது.

அப்போது, தின்னர் என்ற போலி பில் மூலமாக 1000 லிட்டர் மெத்தனாலை வாங்கி விற்பனை செய்துள்ளதாகவும், ஆன்லைன் மூலமாக தொழிற்சாலைகளை கண்டறிந்து ஜிஎஸ்டி பில் இல்லாமல் வாங்கி இருப்பதும் தெரிய வந்தது. சென்னை புறநகர் பகுதியான மாதவரம் ரவுண்டானா அருகில் உள்ள தொழிற்சாலையில் ஒன்றில் இருந்தும் மெத்தனாலை போலி பில் மூலமாக வாங்கியுள்ளனர். மெத்தனாலில் வெறும் தண்ணீரை மட்டும் கலந்து சாராயமாக விற்பனை செய்துள்ளனர்.

மாதேஷிடம் மெத்தனாலை வாங்கிய சின்னத்துரை 1 லிட்டர் மெத்தனாலுக்கு 1 லிட்டர் தண்ணீரை கலந்து விற்றுள்ளனர். சின்னத்துரையிடம் இருந்து மெத்தனாலை பெற்ற கோவிந்தராஜ் அதில் மேலும் ஒரு லிட்டர் தண்ணீரை கலந்து சாராயமாக விற்றுள்ளார். யாராவது சாராயத்தில் வீரியம் குறைவாக உள்ளது என்றால் அடுத்த முறை விற்பனை செய்யும் போது அதில் தண்ணீரின் அளவை குறைத்து 1/2 லிட்டராக கலந்து விற்பனை செய்துள்ளனர்.

சின்னத்துரையிடம் இருந்து கைப்பற்றப்பட்ட சாராயப் பாக்கெட்டுகளை தடவியல் துறைக்கு அனுப்பியுள்ளனர். மெத்தனாலை டாடா ஏஸ் மூலமாக மொத்தமாக கொண்டு வந்து அதனை கார் ஒன்றின் மூலமாக மற்ற இடங்களிலும் விற்பனை செய்துள்ளனர். மாதேஷின் செல்போனில் பணம் அனுப்பியது தொடர்பான ஆன்லைன் பரிவர்த்தனை, பணம் பெறுவது போன்ற புகைப்படங்களை கைப்பற்றி விசாரணையை சிபிசிஐடி போலீசார் துவக்கியுள்ளனர்.

2-வது நாளாக தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது. டாடா ஏஸ் ஓட்டுநரிடம், எந்த தொழிற்சாலைகளில் இருந்து மெத்தனாலை பெற்றார்கள் என்ற விவரங்களை சேகரிக்கும் பணியிலும் ஈடுப்பட்டுள்ளனர். கடந்த முறை வானகரம் அருகே இதே போல போலி பில் மூலமாக தின்னர் எனக்கூறி மெத்தனாலை விற்பனை செய்தவர்கள் கைது செய்யப்பட்டார்கள். அந்த கும்பலுக்கும், மாதேஷிக்கும் தொடர்பா? என்ற கோணத்தில் விசாரணை நடைப்பெற்று வருகிறது.

கைது செய்யப்பட்ட மெத்தனால் விற்பனையாளர்கள் சின்னதுரை அவரது கூட்டாளிகள் சாகுல் ஹமீது, ஜோசப் ராஜ் ஆகிய மூவரும் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே கோவிந்தராஜ், அவரது மனைவி விஜயா, தாமோதரன் ஆகிய மூவர் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், மேலும் மூவரை சிபிசிஐடி போலீசார் சிறையில் அடைத்துள்ளனர். மாதேஷிடம் 2வது நாளாக தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.

Tags :
Advertisement