பிரிஜ் பூஷன் மீதான போக்சோ வழக்கு முடித்து வைப்பு - டெல்லி காவல்துறை பரிந்துரையை ஏற்றது நீதிமன்றம்!
இந்திய மல்யுத்த சம்மேளன முன்னாள் தலைவரும், பாஜகவைச் சேர்ந்த உத்தரப் பிரதேச முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பிரிஜ் பூஷன் சரண் சிங்கிற்க்கு எதிராக ஒரு சிறுமி உட்பட 7 மல்யுத்த வீராங்கனைகள் கடந்த 2023ம் ஆண்டு பாலியல் துன்புறுத்தல் புகார் அளித்திருந்தனர்.
மேலும் அவருக்கு எதிராக மல்யுத்த வீரர், வீராங்கனைகள் போராட்டத்தில் இறங்கினர். குறிப்பாக பிரபல மல்யுத்த வீரர்கள் வினேஷ் போகத் ,பஜ்ரங் புனியா உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து ப்ரிஜ் பூஷணுக்கு எதிராக இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
அதில் 6 வீராங்கனைகள் அளித்த பாலியல் புகார் தொடர்பான வழக்கில், டெல்லி ரௌஸ் அவென்யூ நீதிமன்றத்தில் டெல்லி காவல்துறை 15/06/2023 அன்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. அதேவேளையில் இளம் (minor ) வயது வீராங்கனை அளித்த புகார் தொடர்பான வழக்கில் டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் டெல்லி காவல்துறை சார்பில் ஒரு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இதில் இளம் மல்யுத்த வீராங்கனை பாலியல் துன்புறுத்தல் விவகாரத்தில், இந்திய மல்யுத்த சம்மேளன முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங்கிற்கு எதிரான போக்சோ வழக்கை ரத்து செய்ய டெல்லி காவல்துறை பரிந்துரை செய்தது. குற்றச்சாட்டுகளுக்கு உறுதியான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை என்று நீதிமன்றத்தில் டெல்லி காவல்துறை தனது அறிக்கையில் கூறியது. அந்த பரிந்துரையை பட்டியாலா ஹவுஸ் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது.