பீலா வெங்கடேசன் உடலுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அஞ்சலி!
தமிழக எரிசக்தித்துறை முதன்மைச் செயலாளராக பணியாற்றியவர் ஐ.ஏ.எஸ். அதிகாரி பீலா வெங்கடேசன் (வயது 55). இவர் உடல் நலக்குறைவு காரணமாக நேற்று காலமானார். இவர் கொரோனா பெருந்தொற்று காலத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர், தமிழக எரிசக்தி துறை செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் வகித்தவர் ஆவார்.
கடந்த சில நாட்களாக இவர் உடல்நல குறைவு காரணமாக ஆயிரம் விளக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் பீலா வெங்கடேசன் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு காலமானார். இவரது மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
இந்த நிலையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சென்னை ஈசிஆர் கொட்டிவாக்கத்தில் உள்ள பீலா வெங்கடேசன் உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இது குறித்து அவரது எக்ஸ் தள பதிவில், "தமிழ்நாடு எரிசக்தித்துறை செயலாளராக பணியாற்றி வந்த இந்திய ஆட்சிப் பணி அதிகாரி மருத்துவர் பீலாவெங்கடேசன் `உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
மருத்துவர் பீலாவெங்கடேசன் அவரது பதவிக்காலத்தில் வகித்த அனைத்துப் பொறுப்புகளையும் திறம்பட நிர்வகித்தவர். புகழ்பெற்ற சென்னை மருத்துவக் கல்லூரியில் எனது வகுப்புத் தோழர். நல்ல நண்பர். கல்லூரிக் காலங்களில் இருந்தே எடுத்த பணியை சிறப்பாக செய்து முடிக்கும் திறன் கொண்டவர். தமிழக அரசு நிர்வாகத்தில் உயர்பதவிகளுக்கு வந்திருக்க வேண்டியவர் இளம் வயதில் காலமானது வருத்தமளிக்கிறது.
இ.ஆ.ப. அதிகாரி பீலா வெங்கடேசனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள், சக அதிகாரிகள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.