"மாநிலங்களுக்கான நிதியை பிரதமர் மோடி குறைக்கச் சொன்னார் " - நிதி ஆயோக் தலைவர் பரபரப்பு குற்றச்சாட்டு!
"மாநிலங்களுக்கான நிதியை பிரதமர் மோடி குறைக்கச் சொன்னார் " என நிதி ஆயோக் தலைவர் பரபரப்பு குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வருகின்ற ஜனவரி 31-ஆம் தேதி தொடங்கவுள்ளது. அதன்படி இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் முதல் நாளில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் உரையுடன் இரு அவைகளும் தொடங்கும்.
புதிய நாடாளுமன்ற கட்டடத்திற்கு அவை நடவடிக்கைகள் மாற்றப்பட்ட பிறகு முதன்முறையாக குடியரசுத் தலைவர் உரையாற்றவுள்ளார். இன்னும் சில மாதங்களில் மக்களவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டையே தாக்கல் செய்வார்.
இந்த நிலையில் மாநிலங்களுக்கான நிதியை பிரதமர் மோடி குறைக்கச் சொன்னதாக நிதி ஆயோக் தலைவர் சுப்பிரமணியம் பரபரப்பு குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார். 2014ல் பிரதமரான பிறகு, நரேந்திர மோடி, பிற மாநிலங்களுக்கு ஒதுக்கப்படும் நிதியை கணிசமாகக் குறைக்க நிதி ஆயோக்குடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் அவர் குற்றச்சாட்டுக்களை முனவைத்துள்ளார்.
சமூக மற்றும் பொருளாதார முன்னேற்ற மையம் (CSEP) என்ற அரசு சாரா குழுவால் கடந்த மாதம் இந்தியாவில் நிதிநிலை அறிக்கை குறித்த கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த கருந்தரங்கில்தான் சுப்ரமணியம் இந்தத் தகவலைப் பகிர்ந்து கொண்டார்.
இந்த கூட்டத்தில் பேசிய சுப்ரமணியம் “ அனைத்து மாநிலங்களுக்குமான நிதி ஒதுக்கீட்டை குறைக்க நிதிக்குழுவுடன் பிரதமர் மோடி ரகசியமாக ஆலோசனை நடத்தினார். ஆனால், பிரதமரின் யோசனைகளை நிதிக்குழு தலைவர் ஏற்க மறுத்ததால் மோடி பின்வாங்க நேர்ந்ததாககவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து இந்த விவகாரத்தில் நிதிக்குழு உறுதியாக இருந்ததால் அவசர அவசரமாக தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் பல நலத்திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறைப்பு நடந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பிரதமர் அலுவலகத்தில் அப்போது இணை செயலாளராக இருந்த சுப்பிரமணியம், நிதிக்குழு தலைவர் ஒய்.வி.ரெட்டியுடன் பேசியதாகவும் கூறியுள்ளார். இந்திய அரசின் வரவு, செலவு கணக்குகள் வெளிப்படையாக இருந்தால் அரசின் உண்மையான நிதி நிலைமை தெரிந்துவிடும் எனவும் நிதி ஆயோக் தலைவர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
இந்த கருத்தரங்கின் காணொலி யூடியூபில் பகிரப்பட்டு 500க்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது. இது குறித்து தி ரிப்போர்ட்டர்ஸ் கலெக்டிவ் செய்தி நிறுவனம் விரிவான கேள்விகளை பிரதமர் அலுவலகத்திற்கு (PMO) அனுப்பியிருந்தது. இதன் பின்னர் சில மணி நேரங்களிலேயே அந்த வீடியோ யூடியூபில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தி ரிப்போர்ட்டர்ஸ் கலெக்டிவ் தெரிவித்துள்ளது.
நாடாளுமன்றக் கூட்டத் தொடர் நடைபெற உள்ள நிலையில் நிதி ஆயோக் தலைவர் சுப்ரமணியம் தெரிவித்த கருத்துக்கள் நாடாளுமன்றத்தில் எதிரொலிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. ஏற்கனவே பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்கள் தங்கள் மாநிலங்களுக்கு மத்திய அரசு நிதி குறைப்பு செய்துள்ளதாக குற்றச்சாட்டுகளை முனவைத்துள்ள நிலையில் நிதி ஆயோக் தலைவரின் இந்த கூற்று பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.