விழுப்புரத்தில் பிளஸ் 1 மாணவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு- போலீஸ் விசாரணை!
விழுப்புரம் திருவிக வீதியிலுள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மோகன் ராஜ் என்னும் பதினோராம் வகுப்பு கல்வி பயின்று வருகிறார். இவர்,மேல
தெருவை சார்ந்த மகேஸ்வரியின் இரண்டாவது மகன் ஆவார். மோகன் ராஜ் இன்று வழக்கம் போல் பள்ளிக்கு வருகை தந்துள்ளார். தொடர்ந்து சிறப்பு வகுப்பில் பங்கேற்க பள்ளியின் வகுப்பறையில் உள்ள முதல் இருக்கையில் மாணவன் மோகன்ராஜ் அமர்ந்தபோது மயக்கம் ஏற்பட்டு கீழே விழுந்துள்ளான். இதனையடுத்து அருகிலிருந்த மாணவர்கள் பள்ளி ஆசிரியருக்கு தெரிவித்துள்ளனர்.
அதனை தொடர்ந்து மாணவனை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டான் அங்கு மாணவனுக்கு முதலுதவி சிகிச்சை அளித்துள்ளனர். சிகிச்சை அளிக்கபட்ட சிறிது நேரத்திலையே உயிரிழந்துள்ளான். இதனையடுத்து பள்ளி மாணவனின் உடலை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டு மாணவர்கள் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இச்சம்பவம் தொடர்பாக தகவல் தெரிவிக்கப்பட்டதின் பேரில் விரைந்து வந்த போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை செய்து வருகின்றனர்.முதற்கட்ட விசாரணையில் இதயபிரச்சனை காரணமாக மாணவன் உயிரிழந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திடீரென பிளஸ் 1 மாணவர் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.