பிளஸ் 1 பொதுத்தோ்வு | விடைத்தாள் நகலை இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம்... மறுகூட்டலுக்கு விண்ணப்பிப்பது எப்படி? கட்டணம் எவ்வளவு?
பிளஸ் 1 பொதுத்தோ்வு விடைத்தாள் நகலை இன்று (ஜூன் 10) பிற்பகல் முதல் பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம் என அரசுத் தோ்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
"நடப்பாண்டு மார்ச் மாதம் பிளஸ்-1 பொதுத்தேர்வு எழுதி விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த மாணவர்கள் தங்களது விடைத்தாள் நகலை இன்று (ஜுன் 10) முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பெற்றுக்கொள்ளலாம். இந்த இணையதளத்தில் நோடிபிகேஷன் பகுதியில் 'எச்.எஸ்.இ. முதலாம் ஆண்டு தேர்வு, மார்ச் 2025 - ஸ்கிரிப்ட்ஸ் டவுன்லோடு' என்ற வாசகத்தை கிளிக் செய்ய வேண்டும். பின்னர் தோன்றும் பக்கத்தில் மாணவர்கள் தங்களது தேர்வெண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து விடைத்தாள் நகலை பதிவிறக்கம் செய்யலாம்.
மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்பினால் அதே இணையதளத்தில் வெற்று விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். பின்னர், விண்ணப்பத்தை பூர்த்தி செய்து இன்று முதல் வரும் 13-ம் தேதி வரை சம்பந்தப்பட்ட மாவட்ட அரசு தேர்வுகள் உதவி இயக்குனர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். மறுமதிப்பீட்டுக்கு பாடம் ஒன்றுக்கு ரூ.505-ம், மறுகூட்டலுக்கு உயிரியல் பாடத்திற்கு ரூ.305-ம், ஏனைய பாடங்களுக்கு தலா ரூ.205-ம் கட்டணமாக செலுத்த வேண்டும். கட்டணத்தை மாவட்ட அரசு தேர்வுகள் உதவி இயக்குனர் அலுவலகத்தில் பணமாக செலுத்தலாம்"
இவ்வாறு அதில் தெரிவிப்பட்டுள்ளது.