தரையிரங்கும்போது தலைகீழாக கவிழ்ந்த டெல்டா ஏர்லைன்ஸ் விமானம் - 18 பேர் காயம்!
கனடாவில் தரையிரங்கும்போது விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகி 18 பேர் காயம் அடைந்துள்ளனர். கனடாவின் டொராண்டோ பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில், டெல்டா ஏர்லைன்ஸ்க்கு சொந்தமான விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது. தரையிறங்கும் போது விமானம் கவிழ்ந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவின் மினியோபோலிஸிலிருந்து 80 பயணிகளுடன் புறப்பட்ட விமானம் 4819, உள்ளூர் நேரப்படி பிற்பகல் 2.45 மணியளவில் டொராண்டோவில் தரையிறங்கும் போது விபத்துக்குள்ளானது. விமானத்தில் இருந்த 80 பேரும் வெளியேற்றப்பட்டதாக அமெரிக்க மத்திய விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.
உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த இருவர் உடனடியாக மீட்கப்பட்டு ஹெலிகாப்டர் மூலம் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஒரு குழந்தை மற்றும் மற்ற பயணிகள் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். 12 பேர் லேசான காயமடைந்தனர்.
கனடாவை பனிப்புயல் தாக்கி வரும் நிலையில், விபத்துக்கு மோசமான வானிலை காரணமாக இருக்கும் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
விமானம் தலைகுப்புற கவிழ்ந்து கிடக்கும் காட்சிகளும், தீ பிடிக்காதவறு தண்ணீரை பீய்ச்சி அடிக்கும் பணிகளில் விமான நிலைய ஊழியர்கள் ஈடுபட்டு இருக்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.