சாலை மறியலில் ஈடுபடும் ஜாக்டோ, ஜியோ அமைப்பினர் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடக் கோரி மனு!
திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
அதில், “அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜியோ ஜாக்டோ திருச்சியில் 04.02.2025 அன்று நடைபெற்ற தங்களது மாநில அளவிலான கூட்டத்தில், அனைத்து தாலூகா தலைநகரங்களிலும் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி ஸ்ட்ரைக் மற்றும் சாலை மறியல் போராட்டம் 25.02.2025 அன்று நடைபெற உள்ளதாக அறிவித்துள்ளனர்.
ஏற்கனவே உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் பல வழக்குகளில் அரசு
ஊழியர்கள் இவ்வாறு ஸ்டிரைக் நடத்துவது சட்ட விரோதம் என்று தடை செய்து உள்ள நிலையில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் அறிவித்துள்ள ஸ்டிரைக் மற்றும் சாலை மறியல் சட்ட விரோதமானது.
இவர்களின் கோரிக்கைகள் நியாயமாக இருந்தாலும் அது அவர்களுக்கும்
அரசாங்கத்துக்கும் இடையிலான பிரச்னை. சாலை மறியல் நடைபெற்றால் பொது மக்கள், பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவ மாணவியர், மருத்து தேவைகளுக்காக செல்பவர்கள், தினசரி கூலி வேலைக்கு செல்பவர்கள், தனியார் துறையில் பணிபுரிபவர்கள் என ஸ்டிரைக்-ல் பங்கு பெறாத ஊழியர்கள் பாதிப்பு அடைவார்கள்.
மேலும் சாலை மறியலில் ஈடுபடுபவர்களை காவல்துறையினர் திருமண மண்டபங்களில் தங்க வைத்து அவர்களுக்கு உணவு, குடிநீர் போன்ற வசதிகள் அளிக்க வேண்டும். இதனால் அரசுக்கு தேவையற்ற செலவு ஏற்படுகிறது. எனவே பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு ஜாக்டோ ஜியோ நடத்த உள்ள ஸ்டிரைக்
மற்றும் சாலை மறியல் போராட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும்.
ஸ்டிரைக் மற்றும் சாலை மறியலில் ஈடுபடும் ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பினர் மீது கிரிமினல் சட்டங்கள் கீழ் வழக்கு பதிவு செய்யவும், அவர்களை தற்காலிக பணி நீக்கம் செய்யவும், உரிய விசாரணை நடத்தி நிரந்தர பணி நீக்கம் செய்யவும் உத்தரவிட வேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் நிஷா பானு, ஸ்ரீமதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், "பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் கோரிய நிலையில் வழக்கை ஏப்ரல் 23ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.