"வீட்டு உபயோக பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டுள்ளதால் மக்கள் மகிழ்ச்சி" - மத்திய நிதியமைச்சகம்
வீட்டு உபயோக பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி விதிப்பை குறைத்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் மொத்த சரக்கு மற்றும் சேவை வரி எனப்படும் ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை கடந்த 2017ம் ஆண்டு ஜூலை 1ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டது. ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை நடைமுறைப்படுத்தி ஏழாவது ஆண்டு நிறைவடைந்துள்ளது. இதனையடுத்து, மத்திய நிதியமைச்சகம் ‘எக்ஸ்’ தள பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறப்பட்டுள்ளதாவது,
"ஜிஎஸ்டி அமலுக்கு முன்பு கதவுகள், மேசைகள், அறைகலன்கள், மெத்தைகள் உள்ளிட்ட பொருட்கள் மீது 28 சதவீத வரி வசூலிக்கப்பட்டது. தற்போது அவற்றின் மீது 18 சதவீத ஜிஎஸ்டி மட்டுமே விதிக்கப்படுகிறது. இதேபோல ஜிஎஸ்டி அமலுக்கு முன்பு கைப்பேசிகள், 32 அங்குல தொலைக்காட்சிகள், குளிா்சாதனப் பெட்டிகள், சலவை இயந்திரங்கள் உள்ளிட்டவை மீது 31.3 சதவீதம் வரி விதிக்கப்பட்டது.
அவற்றின் மீது தற்போது 18 சதவீத ஜிஎஸ்டி மட்டுமே வசூலிக்கப்படுகிறது. வீட்டு உபயோக பொருட்கள் மீதான வரி விதிப்பை ஜிஎஸ்டி குறைத்துள்ளது. அந்தப் பொருள்கள் மற்றும் கைப்பேசிகள் மீதான குறைந்த ஜிஎஸ்டி விதிப்பால் ஒவ்வொரு குடும்பத்திலும் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது" என்று பதிவிட்டப்பட்டுள்ளது.