தூத்துக்குடியில் மீன் வாங்க குவிந்த மக்கள்! விலை உயர்வால் மீனவர்கள் மகிழ்ச்சி!
தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடி துறைமுகத்தில் மீன்களின்
வரத்து அதிகம் காணப்பட்ட நிலையிலும், மீன்களுக்கு நல்ல விலை கிடைத்துள்ளதால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடி துறைமுகத்திலிருந்து
500-க்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகள் மூலம் மீனவர்கள் ஆழ்கடலுக்கு சென்று
தங்கி மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். ஆழ்கடலில் தங்கி மீன் பிடிப்பில் ஈடுபட்டு வரும் மீனவர்கள் சனிக்கிழமை அதிக அளவு கரை திரும்புவர்.
அந்த வகையில் இன்று ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற 40-க்கும் மேற்பட்ட
நாட்டுப்படகுகளில், மீனவர்கள் கரை திரும்பினர். இதன் காரணமாக மீன்பிடி ஏலக் கூடத்திற்கு அதிக அளவு மீன்கள் வந்தன.
மேலும் இன்று சனிக்கிழமை என்பதால், காலை முதலே மீன்களை வாங்க பொதுமக்களின்
கூட்டம் அலைமோதியது. மீன்களின் வரத்து அதிகம் காணப்பட்ட நிலையிலும், மீன்களுக்கு நல்ல விலை கிடைத்தது. வஞ்சிர மீன் எனும் சீலா மீன் கிலோ 800 ரூபாய் முதல் 900 ரூபாய் வரையிலும், விளை மீன் கிலோ 500 ரூபாய் வரையிலும், ஊளி மீன் கிலோ 400 ரூபாய் வரையிலும், பாறை மீன் கிலோ 400 ரூபாய் வரையிலும், ஐலஸ் மீன் கிலோ 200 ரூபாய் வரையிலும், கீரிமீன் சாலை ஒரு கூடை ஆயிரம் ரூபாய் வரையிலும், நண்டு கிலோ 800 ரூபாய் வரையிலும் விற்பனையானது. மீன்களுக்கு நல்ல விலை கிடைத்ததால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
வழக்கமாக கிறிஸ்தவர்களின் தவக்காலத்தின் போது மீன்களின் விலை சரிவடையும். ஆனால் தற்போது தவக்காலம் துவங்கிய பின்பும் மீன்களுக்கு நல்ல விலை கிடைத்துள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.