மக்களே உஷாரா இருங்க... சென்னையில் கொரோனா தொற்றால் முதியவர் உயிரிழப்பு!
சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் கடந்த 2020 மற்றும் 2021 ஆண்டுகளில் உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி பல உயிர்களை பறித்துச் சென்றது. ஊரடங்களு, தடுப்பூசி உள்ளிட்ட நடவடிக்கைகளால் கொரோனா தொற்று பரவல் கட்டுபாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இதற்கிடையே, சிங்கப்பூர், ஹாங்காங் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா தொற்று மீண்டும் பரவத் தொடங்கியுள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியானது.
இதையும் படியுங்கள் : கடலூர் அருகே மின்சாரம் தாக்கி 5 வயது சிறுவன் உயிரிழப்பு… மின்வாரிய அதிகாரிகள் மீது கிராம மக்கள் குற்றச்சாட்டு!
கொரோனா தொற்று தற்போது இந்தியாவிலும் பரவத் தொடங்கியுள்ளது. இந்தியாவில் 257 பேருக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்தது. இந்த நிலையில், செங்கல்பட்டு அடுத்த மறைமலைநகர் பகுதியைச் சேர்ந்த 60 வயது முதியவர் கேகே நகர் இ எஸ் ஐ மருத்துவமனையில் உடல்நிலை குறைவால் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டதை அடுத்து அவரை சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி, முதியவரை நேற்று நள்ளிரவு சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுக்கொண்டிருந்தனர். அப்போது, செல்லும் வழியிலேயே முதியவர் உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.