பாலியல் வழக்கில் தலைமறைவாக இருந்த மதபோதகர் ஜான் ஜெபராஜ் கைது!
தென்காசி மாவட்டம் சாம்பார் வடகரை பகுதியைச் சேர்ந்தவர் மத போதகர் ஜான் ஜெபராஜ் (வயது 35). கோவை ஜி.என்.மில்ஸ் பகுதியில் வசித்து வரும் ஜான் ஜெபராஜ் மத போதகராகவும் பிற மாநிலங்கள், வெளிநாடுகளுக்கு சென்று கிறிஸ்தவ பாடல்களை பாடியும், ஆராதனையும் நடத்தி வந்தார்.
கடந்த ஆண்டு மே மாதம் 21 ஆம் தேதி அவருடைய வீட்டில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற 2 சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக ஜான் ஜெபராஜ் மீது அந்த சிறுமிகள் காந்திபுரம் மத்திய மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
அதன்பேரில் போலீசார் மதபோதகர் ஜான் ஜெபராஜ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதை அறிந்த ஜான்ஜெபராஜ் தலைமறைவாகிவிட்டார். அவரை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டு நெல்லை, குமரி மற்றும் தென்காசி மாவட்டத்தில் முகாமிட்டு விசாரணை நடத்தி வந்தனர்.
இதனிடையே, போக்சோ வழக்கில் தலைமறைவாக இருந்த மத போதகர் ஜான் ஜெபராஜ் முன்ஜாமின் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து இருந்தார். இந்த நிலையில், தனிப்படை போலீசாரால் தேடப்பட்டு வந்த மதபோதகர் ஜான் ஜெபராஜ் கைதாகி உள்ளார். கேரள மாநிலம் மூணாறு அருகே பதுங்கி இருந்த ஜான் ஜெபராஜை கோவை போலீசார் கைது செய்துள்ளனர்.